பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 10.pdf/288

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

276

தவத்திரு குன்றக்குடி அடிகளார்






செப்டம்பர் 16


அருள் வாழ்வினை அருள் செய்க!

இறைவா, நெய், பால், உகந்தாடும் இறைவா! நீ ஏன் நெய், பால் உகந்தாடுகின்றாய்! இறைவா, நன்றருளிச் செய்தனை! நெய், பால், சின்னம் எதன்சின்னம்? அன்பின் சின்னம். அன்பின் பொழிவு. சேவையின் சின்னம்.

மனிதன் உண்ணாதனவாகிய தவிடு, வைக்கோல் இவையே பசுவின் உணவு. சுவையற்ற உணவைத்தின்னும் பசு, எனக்கு அமுதமாகிய பாலைப் பொழிந்து தருகிறது. ஒரு பசு தன் வாழ்நாளில் 24, 960 பேருக்கு ஒரு வேளைக்குத் தேவையான பாலைப் பொழிந்து தந்து வளர்க்கிறது.

ஒரு பசு, தன் தலை முறையில் தான் தன் வழிக்கன்று கள் மூலம் 4, 75, 600 பேருக்கு ஒரு வேளைக்குரிய பாலை வழங்கிக் காப்பாற்றுகிறது! இத்தகைய வாழ்க்கை முறை, பகுத்தறிவு படைத்த மனிதனுக்குக் கைகூடவில்லையே! எனக்குக் கைகூடவில்லையே.

நான், எனக்கே நன்மை தேடி அலைகின்றேனே தவிர என்னால் மற்றவருக்கு என்ன நன்மை என்று ஆராய்வதில்லை. எண்ணுவதில்லை! இறைவா, ஏன் இந்த இழிபிறவி?

என் வாழ்க்கை மற்றவர் வாழ்க்கையின் தேவையாக மாறி வளர்ந்து விட்டால் நான் என் வாழ்க்கையைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம். என் வாழ்க்கை தானே நடக்கும்.

அன்பென்ற அமுதம் பொழிந்து தந்து என்னை வாழ்விக்கும் பசுவையே நான் காப்பாற்றுவதில்லையே. இறைவா, என்னை இந்நிலையிலிருந்து எடுத்தாள்க. என் புத்தியினைப் பொருந்துமாறு திருத்துக.

நான் வாழ்தலுக்கு உரிய சாதனம் பிறரை வாழ்வித்தலே என்ற உண்மையை அறிந்து பணி செய்யும் பாங்கினைத் தந்தருள் செய்க!