பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 10.pdf/304

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

292

தவத்திரு குன்றக்குடி அடிகளார்






அக்டோபர் 2


அன்பு செய்யும் வரம் தந்தருள்க!


இறைவா! பல்லுயிராய்ப் பரந்து நிற்கின்ற எம் தலைவா! நின்னருள்பெறும் உயிர்க்குலத்திற்கு யாதொரு துன்பமும் என்னால் நிகழக் கூடாது.

இறைவா, எனது பொறிகளில் கொல்லாமை, துன்புறுத்தாமை ஆகிய நோன்புகளை மேற்கொண்டொழுகும்படி அருள் செய்க! யாதோர் உயிருக்கும் என் வாழ்க்கை முறையில் - மனத்தால், வாக்கால், உடலால்-நான் துன்பம் செய்யக்கூடாது! கொல்லாமையே என் வாழ்க்கையாக வேண்டும்.

இறைவா, இம்சையால் உலகம் வளர்வதில்லை. எனக்கு அகிம்சை தேவை. எனது பகைவனுக்கும் நான் அன்பு காட்ட வேண்டும்! யாதோர் உயிருக்கும் மனத்தினால் கூடத் துன்பம் கருதுதல் கூடாது. இறைவா, அருள் செய்க.

கொல்லாமை நோன்பால்-அகிம்சையால் அரசிய லையே நிகழ்த்திப் பெருமை பெற்றவர் அண்ணல் காந்தியடிகள். நான் என் சொந்த வாழ்வில் அகிம்சையைக் கடைப்பிடிக்க இயலாதா? இறைவா, அருள் செய்க!

என் மனம் யார் மாட்டும் அன்பு செய்யும் வரத்தினைத் தா. வாழ்த்தியே பேசும் வாயினைத் தா. அருள் சுரக்கும் நெஞ்சினையே தந்தருள் செய்க! அன்பே ! அன்பே ! என்று அரற்றி அழும் அருள் நலம் சார்ந்த நன்னெஞ்சத்தைத் தந்தருள்க!

அகிம்சையே என் வாழ்க்கையில் அமைவதாக, கொல்லாமை அறம் குவலயம் முழுதும் குடி கொள்வதாக! உலகு, கொலைகளிலிருந்து விடுதலை பெறுக. எங்கும் சமாதானம் - சகவாழ்வு தழைப்பதாக!