பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 10.pdf/308

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

296

தவத்திரு குன்றக்குடி அடிகளார்





அக்டோபர் 6


இறைவா, என் பொதுத்தொண்டில் குறைகள் வாராது காத்தருள்க!

இறைவா, நன்றுடையானே! தீயதில்லானே. நின் திருவடிகள் போற்றி! போற்றி!! நான் எத்தனையோ பணிகள் செய்கின்றேன், பலருடன் கூடிச் செய்கின்றேன். நான் செய்யும் பணிகளில் பொதுப் பணியும் இருக்கிறது.

இறைவா, நான் பொதுமக்களுக்காகத் தொண்டு செய்தாலும் பொது மக்கள் என் எஜமானர்கள். நான் என் பணியை அலட்சியமாகச் செய்யக்கூடாது. நிர்வாகக் குறையும் ஏற்பட்டு விடக்கூடாது.

பணியைக் கவனக்குறைவுடன் செய்யக் கூடாது. ஆம், இறைவா, இவையெல்லாம் உண்மைதான். அதுமட்டுமன்று. அறிந்த செய்திகளும் கூட. ஆயினும் இறைவா பல சமயங்களில் நான் என் பணிகளைச் சரியாகச் செய்வதில்லை. செய்ய முடிவதில்லை.

பணிகளைச் செய்ய முடிவதில்லை என்பதற்காக நான் வருந்துகிறேன்! வருந்தி என்ன பயன்? இறைவா, முதலில் குற்றத்தை ஒப்புக் கொள்ள வேண்டும்.

நான் என் குற்றத்தை எளிதில் ஒத்துக் கொள்வதில்லை. இனி நான் என் குற்றத்தை ஒப்புக் கொள்கிறேன். நான் என்னைத் திருத்திக்கொள்ளவும் முயற்சி செய்கிறேன். இல்லை, இல்லை. என்னைத் திருத்திக் கொள்கிறேன்.

என் குற்றத்தை, நான் ஒப்புக் கொள்ளும் துணிவைத் தந்தருள் செய்க. திருந்திய வாழ்வையும் ஏற்றுக் கொள்ள அருள் செய்க: இறைவா, என்னை ஏற்றருள் செய்க! என் பொதுத் தொண்டில் குறைகள் வாராது காத்தருள் செய்க! காலந் தாழ்த்தாமல் அருள் செய்க!