பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 10.pdf/348

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

336

தவத்திரு குன்றக்குடி அடிகளார்






நவம்பர் 15


இறைவா, நின் திருநாமம் மறவா நெஞ்சினை அருள் செய்க!



இறைவா, உய்வார்கள் உய்யும் வகையில் ஆட்கொண்டருளும் கடவுளே! என்னை ஆட்கொள்வதற்குக் காலந்தாழ்த்துவது ஏன்? நான் உய்யுமாறு எங்ங்னம்? நான் உய்யும் நெறி எது? என்றெல்லாம் எண்ணாது, நீ அருள் செய்யவில்லை. நீ அருள் செய்யும் பாங்குடையான் இல்லை என்று கூறுவது எவ்வளவு பேதைமை !

இறைவா, நின் அருளுக்கு நான் பாத்திரமாக வேண்டாமா? சிந்தையில் தெளிவினைத் தந்தருள் செய்க! கருவுற்றநாள் முதல் உடனிருக்கும் கூட்டாளிகள் ஐவரின் கூட்டை நீக்கு அல்லது அவர்களுக்கு மடை மாற்றம் தந்து நன்னெறிப்படுத்துக. இந்த ஐவர் என்னுடன் ஒத்துழைத்தாலே நான் உய்தி பெற்றுவிடுவேன். இறைவா, அருள் செய்க!

நின் திருநாமம் மறவா நெஞ்சினை அருள் செய்க! உன்னுடைய பொருள் சேர் புகழையே கேட்கும் புண்ணியப் பேற்றினை அருள் செய்க! உன்னை நினைந்து ஆடி மகிழ அருள் செய்க! என்புருகிப் பாட அருள் செய்க! நின் திருவடி களுக்கு அரும்பொடு மலர்தூவித் தொழுது அரற்றிட அருள் பாலித்திடுக.

இறைவா நின் திருவடிகளை என் தலைக்கு அணியாகச் சூட்டிக் கொண்டு மகிழ அருள் செய்க! என்னை நின்னருள் பெறுவதற்குத் தகுதியில்லை என்று புறத்தே தள்ளாதே! துடைக்கினும் போகேன். நின் அருள் என் ஆவி! ஆவி காத்திட நின்திருநாமம் மறவா நெஞ்சினை அருள் செய்க!