திருவருட்சிந்தனை
377
இறைவா, ஏறுமயிலேறி விளையாடும் அண்ணலே! ஆம் இறைவா! சூரன் வாழ்க்கையில் ஏறும் இயல்பினன்! ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையில் ஏற்றம் பெறும் இயல்புகள் உண்டு! ஆனால், வழிதவறிப் போகும்பொழுது ஏற்றத்தை இழக்கின்றனர்! அப்போதுதான் இறைவனின் கருணை தேவைப்படுகிறது!
இறைவா, நீ சூரனின் இயல்பறிந்து அவனுடைய துடுக்குத் தனத்தைப் பார்த்து வெறுத்துப் புறத்தே ஒதுக்க வில்லை. நீ அருளும் திறத்துடன் சூரனுடன் போராடினாய். பின் ஆட்கொண்டருளினாய்! இறைவா, பின்பும் அவனைத் தனியே விட்டுவிடவில்லை. அவனை அருகிலேயே வைத்துக் கொண்டாய்! ஏறுமயிலாகப் பயன்படுத்திப் பெருமை அருளினை!
இறைவா, நின் செயல் ஒரு வாழ்க்கைத் தத்துவத்தின் வெளிப்பாடு! "விடப்பட்டவர்கள் பேய்களாவார்கள்” என்பது ஓர் உண்மை! இறைவா, என் வாழ்க்கையிலும் இந்தச் செயற்பாடு அமைய அருள் செய்க!
இறைவா, நான் யாரையும் அந்நியமாக ஆக்கக் கூடாது! பழகியவர்களை இடையில் விடக்கூடாது! பழகியவர்களிடம் பகைகொள்ளக்கூடாது! இறைவா, அருள் செய்க! நான் சுற்றிச் சுற்றி வந்து பெற்ற மனித உறவுகளைப் பராமரிக்க வேண்டும்!
இறைவா, என்னோடு பழகிய ஒவ்வொருவரும் நான் அவர்களை நினைவில் வைத்திருப்பதாக எண்ணி மகிழ்ச்சி அடையத் தக்க வகையில் என் கடப்பாடுகள் அமைய அருள் செய்க: இறைவா நிலையான அன்புடன் அனைத்து உயிர் களிடத்தும் பழகி மகிழ அருள் செய்க!