பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11.pdf/352

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

348

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


அப்படி ஒரு குறுகிய நோக்கமும் அதற்குக் காரணம் அல்ல. பொதுவாக உலகில் பல மொழிகள் உண்டு. எல்லா மொழிகளும் மக்களிடத்தில் கருத்தை வளர்க்கவும், கருத்துப் பரிமாற்றங்களைச் செய்யவும்தான் தோன்றின; ஆனால், உலகத்தில் தோன்றிய பல்வேறு மொழிகளை விட, தமிழ் பல துறைகளில் உயர்ந்ததாக இருக்கிறது; செழுமை வாய்ந்ததாக இருக்கிறது. அதற்கு இருக்கிற நீதித் தன்மையும், அறநெறித் தன்மையும் உலகில் இருக்கிற வேறு எந்த மொழிக்கும் வாய்க்கவில்லை என்பதுதான் நான் தமிழை நேசிப்பதற்கு உரிய மிகுதியான காரணம் என்று கூற ஆசைப்படுகிறேன். அது என் தாய் மொழியாக இருப்பது என்பது ஒரு காரணம். அதற்கு ஓர் இருபத்தைந்து விழுக்காடுதான் மதிப்பெண் கொடுக்கலாம். அது என்னுடைய தாய்மொழியாக இருப்பதின் காரணமாக எளிதாகப் பேச, எளிதாக நினைக்க, எளிதாகச் சிந்திக்கத் துணை செய்கிறது என்பதற்கு ஓர் இருபத்தைந்து விழுக்காடு கொடுக்கலாம். ஆனாலும், ஐம்பது விழுக்காடு நான் தமிழினிடத்திலே பற்றாளனாக இருப்பதற்குக் காரணம், தமிழ்மொழி வளர்ந்த முறை தமிழ் வளர்த்த நாகரிகம், தமிழ் வளர்த்த மரபு, தமிழ் வளர்த்த சிறந்த பண்பாடுதான் காரணம். தெளிவாகச் சொன்னால், ஆல்பர்ட் சுவைட்சர் என்ற ஆங்கிலப் பேரறிஞன், ‘உலகில் இருக்கிற நீதி இலக்கியங்களிலேயே, தமிழில் இருக்கிற திருக்குறளைப் போல ஒரு நீதி இலக்கியம், வேறு எந்த மொழியிலும் உலகத்தில் நான் பார்த்ததே இல்லை’ என்று சொன்னான். ஆக, என்னுடைய அன்னைத் தமிழ் வெறும் மொழியாக மட்டும் வளரவில்லை; வெறும் சொற்குவியலாக மட்டும் வளரவில்லை; சொல்லும் பொருளுமாக, பொருளின் பயனுமாக நடமாடுகின்ற ஒரு பெரிய நாகரிகப் பெட்டகம் என்பதுதான் தமிழ்ப் பற்றுக்குக் காரணமே தவிர வேறு ஒன்றும் இல்லை.

எதிர்பாராத காரணமாகச் சில சமயப் பற்றாளர்கள் தமிழுக்கு எதிர்த் திசையில் இருப்பதின் காரணமாகவே,