பின்னிணைப்பு – I
1. சமய மறுமலர்ச்சி
1955-டிசம்பர்
பாரதநாடு உரிமை வாழ்வைப் பெற்றுவிட்டது. அந்த உரிமையைப் பெறுவதற்கு அதுபட்ட பாட்டைவிட, அதனைப் பேணி நலம்பெற இன்னும் மிகுதியாகப் பாடுபட வேண்டுமென்று தலைவர்களும் அறிஞர்களும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். வேற்று நாட்டினர் நாகரிகமும் கல்வியும் பழக்கவழக்கங்களும் இந்நாட்டில் புகுந்திருக்கின்றன. நம் நாட்டுப் பண்பாட்டுக்கு நலிவு உண்டாகியிருக்கிறது. மேல்நாட்டுத் தொடர்பினால் பெற்ற நல்லனவற்றை மாத்திரம் மேற்கொண்டு இந்நாட்டுப் பண்பாட்டை வளர்க்க வேண்டிய பெரிய கடமை பாரத நாட்டினருக்கு முன்னே நிற்கிறது.
இந்தியப் பண்பாட்டின் அஸ்திவாரம் கடவுள் நெறி, அல்லது சமயவாழ்க்கையே ஆகும். இந்நாட்டு எல்லைகளாகிய இமயத்தின் உயர்வை அடிகளாலும் மைலாலும் கணக்கிடாமல் இறைவன் எழுந்தருளியுள்ள இடம் என்று மதிப்பது பாரதப் பண்பு. தென் குமரியைக் கடல்களின்