154
தவத்திரு குன்றக்குடி அடிகளார்
அது மனிதனின் உணர்ச்சிகளுக்கும் ஆசைகளுக்கும் இரையாக இல்லாமல் வெறும் பொழுதுபோக்குக்குப் பயன்படும் நூலாக இல்லாமல், சமுதாயத்தின் அடி மனத்தைத் தொட்டுச் செழுமைப் படுத்தக்கூடிய ஒரு பெரு நூலாகத் திகழ்கிறது.
வரலாற்றுப் போக்கில் நாம் வள்ளுவத்தைப் பார்க்கிறபோது, அரசியல் துறையில்-சமுதாயத் துறையில்-அறிவுத்துறையில் ஏற்பட்டிருக்கிற குறைகளை நீக்கி, நிறைசெய்யத் தோன்றிய நூலாகவே தோன்றும். சமுதாயத்தில் நிலவும் குறைகளைக் களைந்து நிறைவுடைய வாழ்வு வாழ்வதே திருவள்ளுவருக்கு நாம் செய்கிற கைம்மாறு, நாம் செய்யத்தக்க கடமையுங்கூட.
தமிழகத்தில் இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன் தோன்றி இன்றும் வழக்கில் உள்ளது-போற்றிப் பாராட்டப் பெறுகிறது என்பது திருக்குறளுக்குரிய சிறப்பாகும். இந்நூல் உண்மையிலேயே சிறப்புடையதா? அல்லது, காக்கைக்கும் தன்குஞ்சு பொன்குஞ்சு என்ற பழமொழியின்படி நாம் அதைச் சிறப்பிக்கிறோமா என்பதை ஆராய வேண்டும்.
திருக்குறளின் கருத்து காலஎல்லைக்கு உட்பட்டதல்ல. காலங்கடந்த தத்துவங்களையுடையது அந்நூல். திருக்குறள் சாதி, இன, மொழி, நாடு வரையறைகளைக் கடந்து உலகம் தழீஇய பொதுநூல். அது மனித குலத்தின் நீதி நூல்.
வள்ளுவத்தில் அதிசயங்கள் அற்புதங்கள் கிடையாது. அன்று வள்ளுவர் சொன்னதை நாம் இன்று கையாள முடியவில்லையென்றால், அது நூலின் பிழையன்று; நாம் மனித தன்மையிலிருந்து-மனிதப் பண்பிலிருந்து நெடுந்தூரம் விலகிச் சென்றிருப்பதே காரணமாகும். கல்விக்கும் வாழ்க்கைக்கும் இன்றுள்ள உறவு அமாவாசைக்கும்