□ராஜம் கிருஷ்ணன்
9
வயிரங்களைக் கழற்றி வைத்து விட்டாள். காதில் ஒரு சிறு திருகாணியும் கழுத்தில் தாலிச் சங்கிலியும் கையில் ஒற்றை வளையலும் கடிகாரமும் போட்டுக் கொண்டிருக்கிறாள்.
இரண்டு புடவைகளும் உள்ளாடைகளும் ஜிப் பையில் வைத்துக் கொள்கிறாள். மாயா வந்து போயாயிற்று; மாமியார் சாப்பிட்டாயிற்று.
தனது தேவைகளை வெளி வராந்தாவில் வைத்து, பிரதானமாக கதவைச் சாத்தி உள் தாழ்ப்பாள் போட்டுக் கொண்டு, கடைக்குப் போகும் பாவனையில் மாமியார் அறைக்கு வருகிறாள்.
“ஏன், தோடு மூக்குத்தியக் கழட்டிட்டே?”
“அழுக்காயிருக்கு...கழட்டி வச்சேன்...நான் கடைக்குப் போயிட்டு வரேன்...”
பதிலை எதிர்பார்க்காமல் அவள் வெளியேறுகிறாள். பையுடன் படியிறங்கி விடுவிடுவென்று தெருவில் நடக்கிறாள்.
சாலை பஸ் நிறுத்தத்தில் திருமதி மூலே, குழந்தைகளுடன் நிற்கிறாள்.
புன்னகைப் பரிமாறல். பளிச்சென்று மஞ்சள் சல்வார் கமீஸில் எதிர்வீட்டு சுஷ்மா வருகிறாள். “ஆன்டி, எங்கே ஏர் பேகுடன் கிளம்பினர்கள்?”
“ஒரு ஃபிரண்டைப் பார்க்க...”
“ஸ்பிக் மே கே’ ப்ரோகிராம்...ஸவுத் இன்டியன் மியூஸிக்...! ஆன்டி. வரீங்களா? கவிதாகிட்ட இன்விடேஷன் குடுக்கிறேன் ?”
“யார் கச்சேரி.. ?”
“யாரோ வயலின் பர்ஃபாமென்ஸ்...”