பக்கம்:சொன்னால் நம்ப மாட்டீர்கள்.pdf/235

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சின்ன அண்ணாமலை

223



வாழை இலையைப்போட்டு இரண்டு இட்லி எடுத்து வைத்து என் மனைவி, “பிராமணர்கள் எங்கள் வீட்டில் சாப்பிட்டால் பெரும் பாவம் என்று எங்கள் பெரியவர்கள் சொல்லுவார்களே? எல்லாம் அறிந்ததாங்கள் அதைப்பற்றி என்ன அறிவுரை எங்களுக்கு கூறப் போகிறீர்கள்” என்று கேட்டுவிட்டாள்.

அதற்கு ராஜாஜி அவர்கள் என் மனைவியின் நேர்மையான கேள்வியை மெச்சி சுத்தமான இடத்தில் சமையலாகும் எதையும் யாரும் சாப்பிடலாம்.

அதற்கு விதிவிலக்கு கிடையாது. பிராமண குலத்தில் உதித்தவர்கள் எல்லாம் பிரமணர்கள் என்றும், பூணுல் போட்டவர்கள் எல்லாம் பிராமணர்கள் என்றும் கருத வேண்டாம். வேதத்தை அறிந்தவனும் பிராமணியத்தை ஒழுங்காகக் கடைபிடிப்பவனும்தான் பிராமணன். அவன் எந்தக் குலத்தில் பிறந்திருந்தாலும் அவன் பிராமணனே.

“காந்தியத்தைப் பின்பற்றுபவர்கள் கதர் அணிகிறோம். தலையில் குல்லா வைத்துக் கொள்கிறோம். கம்யூனிசத்தைப் பின்பற்றுபவர்கள் செஞ்சட்டை அணிகிறார்கள். அதைப்போல பிராமணியத்தைப் பின்பற்றுகிறவர்கள் அக்காலத்தில் பூணூல் அணிந்தார்கள்.

இப்போது எல்லாத் தவறுகளும் பண்ணுகிறவர்களும், பிராமணியத்திற்கு விரோதமான செயல்களில் ஈடுபட்டிருக்கும் பலர் அந்தக் குலத்தில் பிறந்ததற்காகத் தங்களைப் பிராமணர்கள் என்று சொல்லிக் கொள்கிறார்கள்.

அப்படிப்பட்டவர்களை எல்லாம் விடநீங்கள் பல மடங்கு உயர்ந்த பிராமணர்கள். அதனால் உங்கள் வீட்டில் சாப்பிடுவதில் ஒரு பாவமும் இல்லை” என்று ராஜாஜி கூறினார்.