பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் கருணானந்தம்

154



திருப்பூர் முகைதீன் இந்தி எதிர்ப்புக் காலத்திலிருந்து தொடர்ந்து திராவிட இயக்க மேடைகளிலும் முழங்கி வந்த ஆவேசப் பேச்சாளர். முஸ்லிம் லீகில் இருந்தவாறே நல்ல நட்புடன் ஆதரித்துவந்த பண்பாளர்.

“நகர தூதன்” இதழில் பேனா நர்த்தனம் என்ற பகுதியில், உண்மையிலேயே தமது பேனாவை நடனமாடவிட்ட நயமான எழுத்தாளர் திருமலைசாமி. கேலியும் கிண்டலும், வீரமும் விவேகமும் கொப்புளிக்க எழுதுவார். பெரியாரின் அன்பர்.

இந்திப் பரணி பாடிய இந்தத் தரணி முதல்வர் பெரியார்மீது, ஆச்சாரியார் அரசு வழக்குத் தொடர்ந்து 2 ஆண்டு சிறைத் தண்டனையும், 2000 ரூபாய் அபராதமும் விதித்தது. அன்பான எதிரி ஆச்சாரியார், தமது நண்பரின் இந்தி எதிர்ப்புப் போருக்காக அளித்த இன்பமான பரிசு பெரியாரின் ஃபோர்டுகார் (டூரர்மாடல்) 181 ரூபாய்க்கு அரசினரால் ஏலத்தில் விடப்பட்டது; அபராதத் தொகை வசூலிக்க என்று!

1938 நவம்பர் 26-ல் கைது செய்யப்பட்ட பெரியார் மீது வழக்கு, 1938 டிசம்பர் 5, 6 தேதிகளில் சென்னையில் நடைபெற்றது. தமது நண்பர்களான பாரிஸ்டர் பன்னீர்செல்வம், செட்டி நாட்டு இளவரசர் அ. முத்தையா செட்டியார் ஆகியோர் வேண்டியும், பெரியார் தமது வழக்கம் போலவே எதிர் வழக்காடவில்லை . எழுத்து வடிவில் அறிக்கை ஒன்றினை நீதி மன்றத்தில் வெளியிட்டார். சென்னை ஜார்ஜ்டவுன் 4-வது போலீஸ் நீதிபதி மாதவராவ்தான் விசாரித்துத் தண்டனை வழங்கியவர். பெரியார் அறிக்கையில் என்ன கூறியிருந்தார்? “நான் சம்பந்தப்படும் எந்த இயக்கமும், அல்லது கிளர்ச்சியும், அல்லது போராட்டமும் சட்டத்துக்கு உட்பட்டு, வன்முறையில்லாமல்தான் இருக்கும் என்னுடைய பேச்சுகள் இதை விளக்கும். ஆனால், இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சியை அடக்குமுறை மூலம் ஒடுக்கிவிடக் காங்கிரஸ் அரசு கருதுகிறது. வீட்டுக்குள் திருடன் புகுந்தால் கையில் கிடைத்ததை எடுத்து அடிப்பேன் என முதல் மந்திரியார் பேசிவிட்டார். நீதிபதியோ, காங்கிரஸ் அரசுக்குக் கட்டுப்பட்டவர்; அதிலும் பார்ப்பனர். எனவே எவ்வளவு அதிக தண்டனை தரமுடியுமோ அதையும் எவ்வளவு தாழ்ந்த வகுப்புத் தரமுடியுமோ அதையும், கொடுத்து இந்த விசாரணை நாடகத்தை முடித்து விடுங்கள்” - என்பதாகத் தமது அறிக்கையில் பெரியார், தமது உள்ளக் கிடக்கையைத் தெள்ளிதின் விளக்கியிருந்தார். முதலில் சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்ட பெரியாரை 1939 பிப்ரவரி 16-ல் பெல்லாரி சிறைக்கு மாற்றினார்கள்.

பெரியார் சிறைப்பட்டபோது, தமது தனித்தமிழ்க்குருதி கொதிப்பேறத் திரு.வி.க. தமது “நவசக்தி” ஏட்டில் மிக இரக்கத்துடன் அருமையான தலையங்கம் தீட்டியிருந்தார். ஓய்வு என்பதை அறியாது