பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

171

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்


அண்ணா அமைத்த திராவிட முன்னேற்றக் கழகத்தில் அதிகநாள் பொதுச் செயலாளர் இவரே. பின்னர் சிறிது நாள் மக்கள் முன்னேற்றக் கழகம் கண்டார். இன்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர்.

நீதிக்கட்சியில் இன்னமும் பதவி ஆசை கொண்டவர்களும், முன்னரே பதவியைச் சுவைத்தவர்களும் இருந்து வந்ததை நன்கு உணர்ந்திருந்தார் பெரியார். 1943 ஜூலை 8-ஆம் நாள் வேலூரில் நகரமண்டபத்தில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் அவர்களுக்கெல்லாம் நன்கு அறிவுரை புகன்றார். காங்கிரஸ்காரர் பதவிக்குச் சென்றால் ராமராஜ்யம் நிறுவுவோம் என்று துணிவுடன் சொல்கிறார்கள். முஸ்லீம் லீக் சென்றால் இஸ்லாமிய ராஜ்யம் நிறுவுவோம் என்கிறார்கள். நீதிக்கட்சியினர் சென்றால் என்ன செய்யப் போகிறீர்கள்? நமது இன இழிவு ஒழியத் திராவிடநாடு கேட்பீர்களா? சுயமரியாதைப் பகுத்தறிவுக் கருத்துகளை நடைமுறைக்குக் கொண்டு வருவீர்களா? தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் நான் என் சுயமரியாதைக் கருத்துகளைப் பேசினாலே ஓட்டுக்கிடைக்காது என்று பயப்படுகிறீர்களா! - அதனால் நமக்கு வேண்டாம் தேர்தலும் பதவியும் என்று அறுதியிட்டுக் கூறினார் பெரியார்.

விஞ்ஞான மேதை ஆல்பர்ட் அய்ன்ஸ்டீனுக்கும் பெரியாருக்கும் சமவயதுதான் பெரியார் ஒரு விஞ்ஞானி என்று யாரும் ஒப்புக் கொள்ளமாட்டார்கள். ஆனால் இதுவரை எந்த விஞ்ஞானியும் தமது அறிவியல் கண்ணோட்டத்தில், தீர்க்கதரிசனத்தோடு, எதிர்காலம் எப்படியிருக்கும் எனக் கணித்துக் கூறியதில்லை . எச்.ஜி. வெல்ஸ் ஒரளவு எடுத்துக் காட்டியுள்ளார். இதெல்லாம் பெரியாருக்குத் தெரியாது. ஆனால் அவரது கூர்த்தமதியால், நுட்பமான பகுத்தறிவின் தொலை நோக்குத் திட்பத்தால், அவருக்கே உரிய சுயசிந்தனை ஆராய்ச்சித்திறத்தால் அவர் எழுதியுள்ள ஒரு இருவாரத் தொடர் கட்டுரை அவரை உலகப் பெரும் விஞ்ஞானிகள் வரிசையில் உயர்த்தி உட்கார வைக்கிறது. “இனிவரும் உலகம்” என்ற தலைப்புத்தந்து அண்ணா தமது “திராவிட நாடு” வார இதழில் 1943 மார்ச் 21, 28 தேதிகளில் இக்கட்டுரையினை வெளியிட்டுள்ளார்கள். டெஸ்ட் டியூப் பேபி எனப்படும் சோதனைக் குழாய்க் குழந்தை, டெலிவிஷன் எனப்படும் தொலைக்காட்சி, உணவு மாத்திரைகள் இன்னம் ஏராளமான கண்டுபிடிப்பு எதிர்காலத்தில் நடைமுறைக்கு வரும் என்று பெரியார் அன்றே கூறியுள்ளார்.