பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/649

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

648

பகுத்தறிவு பகலவன் தந்தை



30.9.1973 மதுரையில் கருஞ்சட்டைப்படை மாநாடு. 1948 -ல் கருஞ்சட்டைப்படை மாநாடு நடைபெற்றுகாலை பந்தலுக்குத் தீயிட்டு, வீண்பழி சுமத்திக், கருஞ்சட்டையணிந்த ஆடவரை மட்டுமன்றிப் பெண்டிரையும் அடித்துத் துரத்தி அலைக்கழித்தனர் கொலைக்கஞ்சாக் கொடியோர். இது பற்றிக் கலிங்கத்துப் பரணி நடையில் பேரறிஞர் அண்ணா 26.5.1946 "திராவிட நாடு" மரண சாசனம்" என்ற தலைப்பிட்டு எழுதிய அரிய கட்டுரையைப் படிக்குந்தொறும், கண்ணீர் ஊற்று வெடிக்கும்; கனிவான உள்ளமும் துடிக்கும்!

இப்போதைய மாநாட்டை வீரமணி திறந்து வைத்தார்; தலைமை ஏற்ற பெரியார் முழங்கினார் - “கழகத் தோழர்களே, நீங்கள் உயிருக்கு அஞ்சாதவர்கள் தியாகத்தின் சின்னமாகிய கருஞ்சட்டை அணிந்திருப்பவர்கள். சுதந்திரத் தமிழ்நாடு கேட்பது சமுதாய விடுதலை பெறுவதற்காகத்தான். கேட்பது, சட்ட விரோதந்தான்; ஆனால், நிநாய விரோதமல்ல! ஏழாண்டு சிறையிலிட்டால் பராவாயில்லை என நீங்கள் ஏற்க வேண்டும்" என்று.

மாலையில் மாபெரும் ஊர்வலம் கருஞ்சட்டைத் தோழர்களின் கங்குகரை காணாத எழுச்சிப் பேரணி, மக்கள் திரளால் மதுரை மாநகரே சிறுத்தது! மதுரை அவுட் போஸ்டில் அமைக்கப்பட்டிருந்த பெரியார் சிலை, இரவு 8.30 மணிக்குத் திறந்து வைக்கப்பட்டது. சிலையினைத் திறந்து வைக்க வேண்டிய முதல்வர் டாக்டர் கலைஞர், உடல் நலக் குறைவால் வர இயலவில்லை எனத் தந்தி அனுப்பியிருந்தார். டாக்டர் நாவலர் தலைமையில் அமைச்சர் எஸ்.இராமச்சந்திரன், மணலி கந்தசாமி, மேயர் முத்து, வீரமணி, பெரியார் ஆகியோர் பேசினார்கள்.

“பெரியாரை நீக்கிவிட்டுத் தமிழக அரசியலே இயங்கிட முடியாது. பழைமை வெறி பிடித்த உத்திரப்பிரதேச மாநிலத்தில் கூட ஈ.வெ.ராமசாமிப் பெரியார் துணிந்து நாத்திகப் பிரச்சாரம் செய்தவர்" என்று 5.10.73 “இந்துஸ்தான்டைம்ஸ்” ஏடு தந்தைப் பெரியாரைப் பாராட்டி எழுதிற்று. “தி.க., தி.மு.க இரண்டுக்குமே எதிரிகள் ஒருவரோ அதனால் நாமே ஒருவருக்கொருவர் அழித்திட நினைக்கக்கூடாது. பொது எதிரியை ஒழிக்க, அண்ணா சொன்னது போல், இரட்டைக் குழல் துப்பாக்கியாய்ச் செயல்பட வேண்டும் என்று திருவாரூரில் 10.10.73 அன்று முதலமைச்சர் கலைஞர் மொழிந்தார்.

தஞ்சை, தர்மபுரி போன்ற ஊர்களில் பெரியார் சிலைக்கு அடியிலுள்ள பீடத்தில் பொறிக்கப்பட்டுள்ள கடவுள் மறுப்பு வாசகங்களை அகற்றக்கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ரிட்மனுவை நீதிபதி எம்.எம் இஸ்மாயில் 11.10.73 அன்று தள்ளுபடி செய்தார். சிலைக்கு உரியவனின் கருத்துக்களை அடியில் பொறிப்பதில் தவறில்லை என்றார் ஜஸ்டிஸ்.