114
ஆண்டுத் தொடக்கமாகக் கொள்வதே சாலவும் பொருந்தும் என்னும் கருத்து புலனாகலாம்.
இறுதியாக மழையைப் பற்றிய சொற்செல்வங்களைக் குறிப்பிடுவதோடு இந்த முதல் தொகுதியை முடித்துக் கொள்ளலாம். மழையின் பல்வகை நிலைகளையும் கூறும் பாடல்களைப் படிக்கப் படிக்க மனத்தில் மகிழ்ச்சியும் குளிர்ச்சியும் ஒருங்கே பெருகுகின்றன. அப்பாடல்கள் வருமாறு:–
(மழை தூவுதல்)
“சீகரம், பிதிரே, சிதர், அரி, சிகரம்,
தூவல் என்றிவை துவலை யாகும்.”
(துளி போடுதல்)
“துளி, பெயல், ஆலி, உறைதுளி யாகும்.”
(கட்டி கட்டியாய்ப் பெய்தல்)
“ஆலி, ஆலங் கட்டி யாகும்.”
(பெருமழை பெய்தல்)
“ஆசாரம் என்பது பெருமழை யாகும்.”
(விடாமழை பெய்தல்)
“சோனையும், பனித்தலும், விடாது சொரிதல்.”
(மழைபெய்து விடுதல்)
“தலையல் என்பது மழைபெய்து விடுதல்.”
இச்சொல்வளங்கள் உண்மையிலேயே தமிழுக்குச் சிறப்பு அளிப்பனவன்றோ? இவற்றையெல்லாம் எழுத்திலும் பேச்சிலும் பயன்படுத்தலாமே! இடைக்காலத்தில், மாதம்,என்னும் வடசொல் தமிழ்மொழியில் புகுந்துவிட்டது. அதைக் குறிக்கும் திங்கள் என்னும் இனிய செந்தமிழ்ச் சொல்,