“தமிழ் நாட்டுக்கு வருகிறவர்கள் ஊட்டி பார்க்காமல் போனால் எப்படியோ, அப்படித்தான் தாய்லாந்துக்குப் போகிறவர்கள் ‘சாங்மாய்’ பார்க்காமல் திரும்புவதும்” என்றார் நண்பர் ஹுமாயூன்.
“ சங்மாய்க்கு எப்படிப் போவது?” என்று கேட்டேன்.
“ பஸ் ரொம்ப வசதியாக இருக்குமே!” என்றார்.
“ பஸ்ஸிலா?”
“ஆமாம்; இங்கே டூரிஸ்ட் பஸ்களில் நீங்கள் பயணம் செய்து பார்த்ததில்லையா? ஒரு முறை போய்ப் பாருங்கள்” என்று சொல்லி, நாங்கள் போவதற்கான எல்லா ஏற்பாடுகளையும் செய்து கொடுத்தார்.
அது ஒரு ஏர்கண்டிஷன் லிமோஸின் பஸ் என்று சொல்லி அதை அவமானப்படுத்தக் கூடாது. தரையில் பறக்கும் குட்டி விமானம் என்று சொல்ல வேண்டும். விமானப் பணிப்பெண் போலவே சீருடை அணிந்த பணிப் பெண் ஒருத்தி அந்த பஸ்ஸுக்குள் பம்பரமாய்ச் சுற்றிக் கொண்டிருந்தாள். ஒவ்வொரு இருக்கையும் சரியாக இருக்கிறதா என்று சோதித்துப் பார்த்தாள். ஏ.ஸி.யின் இதத்தை அளவு பார்த்தாள்.
பஸ் கிளம்பியதும் வாசனை வெந்நீரில் ஊறிய துல்லிய மானதும்பைப் பூ போன்ற துணிச் சுருள் ஒன்றை தட்டில் ஏந்தி வந்து பயணிகளுக்குக் கொடுத்தாள். அதை சுடச் சுட முகத்தில் வைத்துத் துடைத்த போது இதமாக இருந்தது.
கைப்பிடியிலுள்ள பட்டனை அழுத்தினால் தலைப்பக்கம் தரையை நோக்கி முக்கால் பாகம் தாழ்ந்து கிட்டத்தட்ட படுக்கை போலாகி விடுகிறது.
46