இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
மலைப் பாதை வளைவுகளைக் கடந்து சமவெளிக்கு வந்ததும் சாங்மாய் நோக்கி வேகமாகப் பறந்தது லிமோஸின்.
வழியெங்கும் தென்னந்தோப்புகள். கரும்பு சாகுபடி சீசன் ஆனதால் கரும்பு லாரிகள் சாலையில் சாரி சாரியாய் விரைந்து கொண்டிருந்தன. ஒரு தோப்பின் ஓரமாக எங்கள் கார் போய்க் கொண்டிருந்தது. ஆள்நடமாட்டம் எதுவும் காணோம். ஆனால் தொப் தொப் என்று தேங்காய்கள் மரத்திலிருந்து விழும் சப்தம் மட்டும் கேட்டது.
காரை நிறுத்திவிட்டு, “உங்களுக்கு ஒரு வேடிக்கை காட்டுகிறேன். வாருங்கள்” என்று கய்டு எங்களைத் தோப்புக்குள் அழைத்துப் போனார்.
தேங்காய் விழுந்து கொண்டிருந்த மரத்தைக் காட்டி “அங்கே பார்த்தீர்களா?” என்று கேட்டார்.