பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தாய்

173


எதிராக எந்தச் சாட்சியமும் கிடையாது. அவன்தான் அப்படி என்ன சொல்லிவிடப் போகிறான்?”.

மகனின்மீது தன் பார்வையைச் செலுத்தியவாறே தாய் அங்குமிங்கும் நடமாடிக்கொண்டிருந்தாள். அந்திரேய் தன்னிரு கைகளையும் பிடரியில் கோத்துக்கொண்டு ஜன்னலுக்கு நேராக நின்று பாவெல் சொல்வதையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்தான். பாவெல் அங்குமிங்கும் உலவினான். அவனுக்குத் தாடி அதிகம் வளர்ந்து போயிருந்தது. அழகான கருமயிர்ச் சுருள்கள் கன்னம் இரண்டிலும் சுருண்டு வளர்ந்து அவனது கரிய சருமத்தை இதப்படுத்திக் காண்பித்தன.

“உட்காருங்கள்” என்று சாப்பாட்டைக் கொண்டுவந்தவாறே சொன்னாள் தாய்.

சாப்பிடும்போது அந்திரேய் பாவெலிடம் ரீபினைப்பற்றிச் சொன்னான்; அவன் பேசி முடித்ததும், பாவெல் வருத்தத்தோடு பதிலுரைத்தான்:

“நான் மட்டும் இங்கிருந்தால், அவனை நான் போகவிட்டிருக்கமாட்டேன். அவன் செல்லும்போது என்னத்தைக் கொண்டு போனான்? மனக்கசப்பையும் மனக் குழப்பத்தையும்தான் சுமந்து சென்றான்.”

“சரி, ஆனால் ஒரு மனிதன் நாற்பது வயதை எட்டிய பிறகு, அத்தனை காலமும் தன் இதயத்துக்குள்ளே வேண்டாத விஷயங்களோடு முண்டி முண்டிப் போராடிக்கொண்டிருந்த பிறகு, அவனைச் சீர்திருத்தி வழிக்குக் கொண்டுவருவது என்ன, லேசுப்பட்ட காரியமா?” என்று சிரித்துக்கொண்டே சொன்னான் ஹஹோல்.

அவர்கள் விவாதிக்க ஆரம்பித்தார்கள். அந்த விவாதத்தில் வார்த்தைகள்தான் மலிந்திருந்தனவாகத் தோன்றியதே ஒழிய, அதிலிருந்து எந்த விஷயத்தையும் தாயால் கிரகித்துக்கொள்ள இயலவில்லை சாப்பாடு முடிந்தது. என்றாலும் அவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் தடபுடலான வார்த்தையலங்காரத்தோடு வாதாடிக்கொண்டிருந்தார்கள். சில சமயங்களில்தான் அவர்கள் தெளிவாகவும் எளிமையாகவும் பேசினார்கள்.

“நாம் நமது கொள்கையில் ஓரடிகூடப் பின்வாங்காது நிலைத்து நின்று முன்னேற வேண்டும்” என்று உறுதியோடு சொன்னான் பாவெல்.

“ஆமாம் நம்மையெல்லாம் தங்களது எதிரிகள் என்று கருதும் பல்லாயிரங்கோடி மக்களிடையே நாம் கண் மூடித்தனமாக முன்னேற வேண்டும். இல்லையா?....”