பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/266

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தாய்

249


சத்தியமும் தர்மமும் நியாயமும் உள்ள வாழ்க்கை ! சகல மக்களுக்காகவும் அவர்கள் நன்மையை நாடுகிறார்கள்!”

அவளது இருதயம் நெஞ்சுக்குள் புடைத்து நின்றது; தொண்டை சூடேறி வறண்டது: அவளது நெஞ்சாழத்துக்குள்ளே பெரிய பெரிய, புதிய புதிய வார்த்தைகள் பிறந்தன; அந்த வார்த்தைகள்; பரிபூரண அன்பு நிறைந்த அந்த வார்த்தைகள், அவளது நாக்குக்கு வந்து அவளை மேலும் அதிகமான உணர்ச்சியோடு, மேலும் அதிகமான சுதந்திரத்தோடு பேசுமாறு நிர்ப்பந்தித்தன.

எல்லோரும் தான் கூறுவதை மெளனமாகக் கேட்டுக் கொண்டிருப்பதை அவளால் காண முடிந்தது. அவளைச் சுற்றிலும் சகல மக்களும் நெருக்கமாகச் சூழ்ந்து, ஆவலும் சிந்தனையும் நிறைந்தவர்களாகக், குழுமி நின்றார்கள். அவனிடம் காணப்பட்ட ஆவலுணர்ச்சியானது அவளது மகனுக்குப் பின்னால், அந்திரேய்க்குப் பின்னால், சிப்பாய்களின் கையில் சிக்கிவிட்ட அத்தனைப் பேர்களுக்குப் பின்னால், நிராதரவாக விடப்பட்ட அந்த வாலிபர்களுக்குப் பின்னால் சகல மக்களும் ஓடிச்செல்ல வேண்டும் என்று தூண்டும் உணர்ச்சிதான் என்பதைத் தாய் கண்டுகொண்டாள்.

முகத்தைச் சுழித்துக் கவன சிந்தையராக நிற்கும் அவர்களது முகங்களை ஒரு முறை பார்த்துவிட்டு, அவள் அமைதி நிறைந்த பலத்தோடு மேலும் பேசத் தொடங்கினாள்:

“நமது பிள்ளைகள் இன்பத்தைத் தேடி இந்த உலகுக்குள் புகுந்துவிட்டார்கள். நம் அனைவரது நலத்துக்காக, கிறிஸ்து பெருமானின் சத்தியத்துக்காக, நம்முடைய முதுகில் அறைந்து, நமது கைகளைக் கட்டிப்போட்டு, நம்மை இறுக்கித் திணற வைத்த கொடுமையும், பொய்மையும் பேராசையும் கொண்ட பேர்களின் சகல சட்டதிட்டங்களுக்கும் எதிராக, அவர்கள் சென்றுவிட்டார்கள். அன்பான மக்களே! நம் அனைவருக்காகவும் சர்வதேசங்களுக்காகவும். உலகின் எந்தெந்த மூலையிலோ இருக்கின்ற சகல தொழிலாளர் மக்களுக்காகவும்தான் நமது இளம்பிள்ளைகள், நமது வாலிபர்கள் எழுச்சி பெற்றுச் செல்கிறார்கள். அவர்களைப் புறக்கணிக்காதீர்கள். அவர்களை வெறுக்காதீர்கள், உங்கள் குழந்தைகளைத் தன்னந்தனியாகச் செல்லுமாறு செய்யாதீர்கள்! நீங்கள் உங்கள் மீதே அனுதாபம் கொள்ளுங்கள். உண்மைக்குப் பிறப்பளித்து, அந்த உண்மைக்காகத் தங்கள் உயிர்களையும் இழக்கத் தயாராயிருக்கும் உங்கள் குழந்தைகளின் இதயங்களின் மீது நம்பிக்கை வையுங்கள். அவர்களை நம்புங்கள்!”