உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/298

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

282

மக்சீம் கார்க்கி


உணர்ச்சியை உருவாக்கி வெளியிடும் மனங்கனிந்த வார்த்தைகளோடு, அந்த ஸ்வரநாதங்களும் ஒன்றிக் கலந்து மிருதுவாக ஒலித்தன.

“இப்போது என்னால் என்னைப் பற்றியும், பொதுவாக மக்களைப் பற்றியும் சொல்ல முடியும். ஏனெனில் இப்போது வாழ்க்கையைப் புரிந்து கொள்ளவும்; ஒப்பிட்டுப்பார்க்கவும் என்னால் முடிகிறது. இதற்கு முன்பெல்லாம் ஒப்புநோக்கிப் பார்ப்பதற்கே ஒரு விஷயமும் இருந்தது. இல்லை. எல்லோருமே ஒரே மாதிரியாக வாழ்கிறார்கள் என்றே எனக்குத் தோன்றியது. இப்போதோ மற்ற ஜனங்கள் எப்படி வாழ்கிறார்கள் என்பதையும் நான் எப்படி வாழ்ந்தேன் என்பதையும் என்னால் அறிய முடிகிறது. இதுவும் ஒரு கஷ்டம்தான்!”

அவள் தன் குரலைத் தாழ்த்திக்கொண்டு மேலும் பேசினாள்:

“நான் சொல்லுவது தவறாக இருக்கலாம். சொல்லவே தேவையில்லாமல் இருக்கலாம். ஏனென்றால் உங்களுக்கே அதெல்லாம் நன்கு தெரியும்....”

அவளது குரலில் கண்ணீரின் அடையாளம் தென்பட்டது. எனினும் அவர்களைப் பார்த்தபோது அவள் கண்களில் ஒரு குதூகலம் பிறந்தது. அவள் சொன்னாள்:

“ஆனால் நான் என் இதயத்தை உங்களிடம் திறந்து காட்ட விரும்புகிறேன். உங்களது நலத்தில் நான் எவ்வளவு தூரம் அக்கறை கொண்டிருக்கிறேன் என்பதை உங்களுக்கு எடுத்துக்காட்ட விரும்புகிறேன்”

“நாங்கள்தான் கண்ணாரப் பார்க்கிறோமே” என்று மெதுவாகச் சொன்னான் நிகலாய்.

என்றாலும், தனது ஆவலைத் தான் பூர்த்தி செய்து கொள்ள இயலாதது போலத் தோன்றியது அவளுக்கு. எனவே அவள் தனக்குப் புதியனவாகவும், அளவற்ற முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் தோன்றிய எதையெதையோ பற்றி மீண்டும் பேசத் தொடங்கினாள். பொறுமையும் கசப்புணர்ச்சியும் நிறைந்த தனது வாழ்வைப்பற்றி அவர்களிடம் சொல்லத் தொடங்கினாள். ஆனால் அந்தப் பேச்சில் உக்கிரம் இல்லை; ஏதோ ஒரு இரக்கமான பேலி பாவம்தான் தொனித்தது. தனது கடந்த கால வாழ்க்கையை உருவாக்கிய இருண்ட நாட்களைப் பற்றிய சிந்தனைகளைச் சொன்னாள். தனது கணவனிடம் தான் பெற்ற அடி உதைகளைப் பற்றிக் கூறினாள். அந்த அடி உதைகளுக்குரிய காரண காரியமற்ற நிலைமையையும் அவற்றைத் தடுக்க முடியாதிருந்த தன் ஏலாத் தளத்தையும் எண்ணி அவளே வியந்துகொண்டாள்......