பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/475

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தாய்

459


“கோபுன் தன் மருமகனையும் விடுவிக்க எண்ணுகிறான். எவ்சென்கோவை ஞாபகமிருக்கிறதா? உங்களுக்குக்கூட அவனைப் பிடித்திருந்ததே. எப்போதுமே அவன் ஓர் அதிசுத்தக்காரப் பகட்டான ஆசாமிதான்.”

நிகலாய் தலையை அசைத்தான்.

“அவன் சகல ஏற்பாடுகளையும் செய்துவிட்டான்” என்று மேலும் தொடங்கினாள் சாஷா. “ஆனால் நமது முயற்சி வெற்றியடையுமா என்பதில் எனக்குச் சந்தேகம் தோன்றி வருகிறது. எல்லாக் கைதிகளும் வெளியே காற்று வாங்கிக்கொண்டிருக்கும் வேளையில்தான் இது நடக்கப்போகிறது. ஆனால், அந்தச் சமயத்தில் அவர்கள் இந்த ஏணியைப் பார்த்துவிட்டால், பலபேர் அதை உபயோகித்துத் தப்பித்து ஓட எண்ணலாம். அதுதான் பயமாயிருக்கிறது.”

அவள் தன் கண்களை மூடி மௌனத்தில் ஆழ்ந்தாள். தாய் அவளருகே சென்றாள்.

“அப்படியானால் அவர்கள் ஒருவருக்கொருவர் முண்டியடித்து காரியத்தையே கெடுத்துவிடுவார்கள்......”

மூன்று பேரும் ஜன்னலருகிலேயே நின்றார்கள். நிகலாய்க்கும் சாஷாவுக்கும் பின்னால் தாய் நின்று கொண்டிருந்தாள், அவர்கள் இருவரது விறுவிறுப்பான பேச்சு தாயின் உள்ளத்தில் பற்பல உணர்ச்சிகளை எழுப்பியது.

“நானும் போகிறேன்” என்று திடீரெனச் சொன்னாள் அவள்.

“ஏன்?” என்று கேட்டாள் சாஷா.

“நீங்கள் போக வேண்டாம். அம்மா. ஏதாவது நேர்ந்துவிடக்கூடும். போகாதீர்கள்” என்று போதித்தான் நிகலாய்.

தாய் அவனைப் பார்த்தாள்.

“இல்லை. நான் போகிறேன்” என்று மெதுவாக, ஆனால் உறுதியோடு சொன்னாள் அவள்.

இருவரும் ஒருவரையொருவர் சட்டெனப் பார்த்துக்கொண்டார்கள்.

“எனக்குப் புரிகிறது” என்று சொல்லிக்கொண்டே தோளைக் குலுக்கிக்கொண்டாள் சாஷா. பிறகு அவள் தாயின் பக்கமாகத் திரும்பி, அவளது கையைப் பிடித்தெடுத்து தாயின் உள்ளத்தைத் தொடும் எளிய குரலில் பேசினாள்.

“ஆனால், நீங்கள் சிந்தித்து உணர வேண்டும். அப்படி நடக்குமென்று வீண் நம்பிக்கை கொள்வதில் அர்த்தமே இல்லை.....”