பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-2.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

106 * திருவாசகம் - சில சிந்தனைகள் - 2


79.

வணங்கும் நின்னை மண்ணும் விண்ணும்
     வேதம் நான்கும் ஓலம் இட்டு
உணங்கும் நின்னை எய்தல் உற்று
      மற்று ஓர் உண்மை இன்மையின்
வணங்கி யாம் விடேங்கள் என்ன
       வந்து நின்று அருளுதற்கு
இணங்கு கொங்கை மங்கை பங்க
       என்கொலோ நினைப்பதே 75


உணங்கும்-நாவற்றும். விடேங்கள்-விடமாட்டோம். ஓலம்-அபயம்.

‘மண், விண் ஆகியவற்றில் வாழ்வோருடன் வேதங்களும் சேர்ந்து உன்னைத் துதித்து நிற்கின்றன. மெய்யடியார்கள் உன் திருவடிகளைப் பற்றிக்கொண்டு விடமாட்டோம் என்று உறுதியாக நிற்கின்றனர். இந்தக் காட்சிகளைக் கண்டும் எங்களுக்கு வந்து அருள் செய்யாமல் என்ன ஆராய்ந்து கொண்டிருக்கிறாய்' என்றவாறு.

இப்பாடலில் இறைவியை உடன் சேர்த்துக் கூறியதன் நோக்கம் நாங்கள் வணங்கும்போது கருணை வடிவான இறைவி உடனிருத்தலின், எங்கள்மாட்டுக் கருணை காட்டியே தீரவேண்டும் என்ற கருத்தை உட்கொண்டதாகும்.


80.

நினைப்பது ஆக சிந்தை செல்லும்
      எல்லை ஏய வாக்கினால்
தினைத்தனையும் ஆவது இல்லை
      சொல்லல் ஆவ கேட்டவே
அனைத்து உலகும் ஆய நின்னை
      ஐம்புலன்கள் காண்கிலா
எனைத்து எனைத்து அது எப்புறத்தது
     எந்தை பாதம் எய்தவே 76