பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-2.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நீத்தல் விண்ணப்பம் * 163



'ஆணவம், கன்மம், மாயை, மாயேயம்(வைந்தவம்), திரோதாயி என்ற ஐந்து குற்றங்களாலும் சூழப்பெற்று, தயிரின் இடைப்பட்ட மத்துப்போல் இங்கும் அங்குமாய்ச் சுழல்கின்றேன்’ என்கிறார்.

மத்துறு தயிர் என்று கூறாமல் 'தயிரிற் பொரு மத்து’ என்று அடிகளார் கூறியமையின் மத்தையே உவமையாக்குகின்றார். அதாவது, தூய்மையான மத்து தயிரைக் கடைய முற்பட்டதால் அத்தயிர் மத்து முழுவதிலும் ஒட்டிக்கொள்கிறது. அன்றியும் ஒரு முறை இடமிருந்து வலமும், மறுமுறை வலமிருந்து இடமும் சுழலும் இயல்புடையது தயிரிற் பொரு மத்து. இந்த உவமையின் மூலம் மற்றொன்றையும் பெறவைக்கின்றார். மத்தில் தயிர் ஒட்டிக்கொள்வதுபோலத் துரய்மையான ஆன்மாவில், மேலே கூறிய ஐந்து குற்றங்களும் (மலங்களும்) ஒட்டிக்கொள்கின்றன. அன்றியும் இடம், வலம் என்று மாறிமாறி மத்துச் சுற்றுவதுபோல் உலக பந்தங்களிலிருந்து விடுபட்டு முன்னேற முயலும் ஆன்மா ஒரளவு சென்றுவிட்டு மறுபடியும் இந்த ஐந்து குற்றங்களுக்கே திரும்பிவிடுகிறது.

முன்னேறுதல், தளர்ந்து வீழ்தல் என்ற இரண்டையும் நினைவூட்டவே தயிரில் பொரு மத்து என்றார்.

134.

மத்து உறு தண் தயிரின் புலன் தீக்
கதுவக் கலங்கி
வித்து உறுவேனை விடுதி கண்டாய்
வெண்தலை மிலைச்சிக்
கொத்துஉறு போது மிலைந்து
குடர் நெடு மாலை சுற்றித்
தத்துஉறு நீறுடன் ஆரச் செம் சாந்து
அணி சச்சையனே 30