பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-2.pdf/241

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

230 • திருவாசகம் - சில சிந்தனைகள் - 2


165.மொய் ஆர் தடம் பொய்கை புக்கு முகேர் என்னக்
கையால் குடைந்து குடைந்து உன் கழல் பாடி
ஐயா வழி அடியோம் வாழ்ந்தோம் காண் ஆர் அழல்போல்
செய்யா வெள் நீறு ஆடி செல்வா சிறு மருங்குல்
மை ஆர் தடம் கண் மடந்தை மணவாளா
ஐயா நீ ஆட்கொண்டருளும் விளையாட்டில்
உய்வார்கள் உய்யும் வகை எல்லாம் உய்ந்து ஒழிந்தோம்
எய்யாமல் காப்பாய் எமை ஏல் ஒர் எம்பாவாய்
11


மொய்-(வண்டுகள்) மொய்க்கின்ற. மருங்குல்-இடை. எய்யாமல்-இளைக்காமல்.

அகன்ற பெரிய பொய்கையிடத்து முகேரெனப் பாய்ந்து கையால் குடைந்து முன்னேறிச் செல்லுதல் உடம்பின்வசப்பட்டதாகும். இந்தச் செயலில் கை, கால் முதலிய உறுப்புகள் பல்வேறு தொழில்களைச் செய்வதால் குளத்தில் பாய்தலும் முன்னேறிச் செல்லுதலும் இயன்றது என்க.

இந்த நிலையில் வாய் தனக்கென ஒரு பணியை மேற்கொண்டுள்ளது. சாதாரணமாக நீரில் குளிப்பவர் ஆ...ஊ... என்று ஆரவாரித்துத் தம் மகிழ்ச்சியை வெளியிடுவர். நீராடுவதால் உடலுக்கு ஏற்படும் இன்பத்தை, அவர்களின் வாய் ஆரவாரம் வெளிப்படுத்தும்.

இந்தச் சராசரி இயற்கைக்கு மாறாக, இப்பெண்கள் நீரில் துளையமாடும்போதும், அவர்கள் வாய், ஆரவாரம் செய்யாமல் இறைவன் திருவடிப் புகழைப் பாடகின்றது என்ற கருத்தை 'உன் கழல்பாடி' என்ற சொற்களால் பெறவைத்தார்.

தம்மாட்டு உள்ள இறையன்பு வலுப்பெற்றதற்குரிய காரணம் தங்கள் பரம்பரைச் சிறப்பே என்பதை நினைவூட்டவே 'வழியடியோம்’ என்றனர்.