பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-2.pdf/254

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருவெம்பாவை * 243


அதனைப் போக்கவே 'பேதித்து நம்மை வளர்த்தெடுத்த பெய்வளை’ என்கிறார்.

‘வளர்த்தெடுத்த பெய்வளை’ என்பதால் தாய் என்று கூறினாராயிற்று. தாய் உடம்பை வளர்க்கின்றாள். அகத்தில் உள்ளவை தாமே வளர்கின்றன. மானிடத் தாய்க்கும் இறைவிக்கும் உள்ள வேற்றுமையைப் 'பேதித்து' என்ற ஒரு சொல்லால் விளக்குகிறார் அடிகளார். பேதித்தல்’ என்பது நிலையை மாற்றுதல் என்ற பொருளைத் தருவதாகும்.

கணந்தோறும் அறிவு வளர்கின்றது. ஒவ்வொரு வளர்ச்சியின்போதும் சென்ற கணத்தில் சூழ்ந்திருந்த அறியாமை வெளிப்படுகின்றது. இங்கே 'பேதித்தல்’ என்பது புதிய வளர்ச்சியில் பழைய அறியாமையைப் போக்குதல் என்ற பொருளைத் தருவதாகும். 'வளர்த்து எடுத்த’ என்பது உடல் வளர்ச்சியை மட்டுமன்றி உள்ள வளர்ச்சி, அறிவு வளர்ச்சி என்பனவற்றையும் குறிப்பதாகும்.

உடலை வளர்க்கும் தாயே முதலில் அறியப்படுகின்ற தெய்வம் என்றால், அறிவையும் மனத்தையும் வளர்த்தெடுக்கின்ற பெருமாட்டி அன்னையினும் சிறந்தவள் என்பதால், அவள் 'பாதத் திறம்பாடி’ என்றார்.


169. ஒர் ஒரு கால் எம்பெருமான் என்று என்றே நம் பெருமான்
சீர் ஒரு கால் வாய் ஒவாள் சித்தம் களி கூர
நீர் ஒரு கால் ஒவா நெடும் தாரை கண் பனிப்பப்
பார் ஒரு கால் வந்தனையாள் விண்ணோரைத் தான் பணியாள்
பேர் அரையற்கு இங்ஙனே பித்து ஒருவர் ஆம் ஆறும்
ஆர் ஒருவர் இவ்வண்ணம் ஆட்கொள்ளும் வித்தகர் தாள்
வார் உருவப் பூண் முலையீர் வாய் ஆர நாம் பாடி
ஏர் உருவப் பூம் புனல் பாய்ந்து ஆடு ஏல் ஓர் எம்பாவாய்

15