பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/337

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முதல் தொகுதி / வலம்புரிச் சங்கு : 335

டேய் பூமாலைக்கு என்ன குழந்தை பிறக்கும்டா?”

"ஆம்பளைக் கொழந்தைதாண்டா.”

'இல்லேடா! பொம்பளைக் குழந்தைதான்!

“என்ன பந்தயம்டா கட்டறே?”

"இன்றைக்குச் சங்கு குளிக்கிற கூலி முழுதும்டா..!"

“அட! என்ன குழந்தையானால் என்ன? நல்லதாகப் பிறக்கட்டும். அதுதான் வேணும். நீங்க ஏண்டா பந்தயம் போட்டு மடியறீங்க” கூட இருந்த கூலிக்காரர்கள் வேடிக்கையும், விளையாட்டுமாக ஏதேதோ பேசிக்கொண்டே வந்தனர். பூமாலை அதில் கலந்து கொள்கிறவனைப் போலச் சிரித்துத் தலையைக் குனிந்துகொண்டானே ஒழிய மனமார அவனால் அந்தக் குதுகலத்தில ஈடுபட முடியவில்லை.

படகுகள் குறிப்பிட்ட இடத்தை அடைந்தன. உடலின் சூடு குறையாமல் இருப்பதற்காகக் கொழுப்புக் கலந்த ஒரு வகை எண்ணெயைச் சங்கு குளிப்பவர்கள் எல்லோரும் தடவிக் கொண்டிருந்தார்கள். பூமாலை சும்மா உட்கார்ந்திருந்தான்.

"ஏய் பூமாலை! நீ என்ன சும்மாக் குந்திகிட்டிருக்கே? எண்ணெய் பூசிக்கிட்டு இறங்கு, சொல்கிறேன்.வீட்டைநினைச்சுக் கவலைப்படாதே.எல்லாம் நல்லபடியாக முடியும்...!. பரமசிவம் பிள்ளை இரைந்தார்.

பூமாலை கொழுப்பு எண்ணெயைச் சூடு பறக்கத் தேய்த்துத் தடவிக் கொண்டான்.

சங்கு குளிப்பவர்கள் நாலா திசைகளிலும் முங்கி எடுத்துக்கொண்டு வருவதற்கு வசதியாகப் படகோட்டிகள் படகுகளை ஒருவிதமான வியூகத்தில் வளைத்து நிறுத்தினார்கள்.

ஆட்கள் ஒவ்வொருவராகக் கடலில் குதித்தனர். கடைசியாகப் பூமாலை குதித்தான்.ஆவலோடு கடற்பரப்பைப் பார்த்துக் கொண்டு படகில் உட்கார்ந்திருந்தார் கண்டிராக்டர் பரமசிவம் பிள்ளை.

நேரம் ஆக ஆகப் படகுகள் சங்குகளால் நிறைந்து கொண்டிருந்தன. பூமாலை ஒருவன் மட்டும் மற்றவர்கள் எல்லோரும் சேர்ந்து எடுத்த அவ்வளவு சங்குகளையும் போல இரண்டு மடங்கு எடுத்துக் குவித்திருந்தான். பரமசிவம் பிள்ளைக்குப் பரம சந்தோஷம். உச்சிப் போது ஆகிவிட்டது. எல்லாக் கூலியாட்களும் அலுத்துப்போய்ப் படகுகளில் ஏறி உட்கார்ந்து கொண்டு சோற்று மூட்டைகளை அவிழ்க்க ஆரம்பித்துவிட்டனர்.

பூமாலை இன்னும் சங்கு குளித்துக் கொண்டு தான் இருந்தான்.

“போதும்டா பூமாலை வா! படகில் ஏறு. சாப்பாட்டுக்கு மேலே மறுபடியும் பார்க்கலாம்!” பிள்ளை அவனைக் கூப்பிட்டார்.

"இருங்க எசமான்! கடைசித் தடவையாக ஒரே ஒரு

முங்கு போட்டு வந்துடறேன்.”