பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/244

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

866

நா. பார்த்தசாரதி சிறுகதைகள்

என்னிடமுள்ள இரசனைக்கும்
உனக்கும் நடுவே திரைகள் எதற்கு?
திரைகளும் ஆடைகளும் எல்லாம்
அடுத்த பிறவியில் அந்தகர்களாகப்
பிறந்து அவலப்படட்டும்”

என்ற பொருளில் கவிதை ஒன்று எழுதியிருந்தான் அவன். மிக இளமையில் அவன் எழுதிய கவிதை இது. அதனால் கொஞ்சம் விரசம் என்று கூடச் சில விமர்சகர்கள், இந்த வகைப் பாடல்களை அவனுடையவற்றிலிருந்து தனியே பிரித்துச் சாடுவது உண்டு. செழுமையான தோள்களும், பின்னும் முன்னும் இடையிலும் பொன் சதை மேடுகளும், தங்க வாய்க்காலும் மின்ன ரவிக் தரித்துப் புறப்பட்ட போது அவனது இந்தப் பழங்கவிதையையே அவள் நினைத்தாள். விமான நிலையத்திற்கு அவனை வரவேற்கவும் அழைத்துச் செல்ல முயல்வதற்கும் யார் யார் வந்திருப்பார்கள் என்று அவள் எதிர்பார்த்தாளோ, அதை விட அதிகமாகவே வந்திருந்தார்கள். பலர் கைகளில் மாலைகள் இருந்தன. தானும் ஒரு மாலை வாங்கி வந்திருக்கலாமே என்பது அவளுக்கு அப்போதுதான் தோன்றியது. அந்தரங்கத்தில் தானே ஒரு பூமாலைப் போல் அவன் நெஞ்சில் சரியவும் தயாராயிருந்தாள் அவள். அவனைப் பொறுத்த வரை அவள் எல்லாச் சிறைகளையும், தளைகளையும் உடைத்துக் கொண்டு நிற்கவும் ஆசைப்பட்டாள். அவள் கணவன் ஊரில் இல்லை. ஏதோ அலுவலாக டெல்லி போயிருந்தான். அவன் டெல்லிக்குப் போனால் வர நாளாகும். அங்கே சிநேகிதர்களும், சிநேகிதிகளும் அவனுக்கு அதிகப் பேர் உண்டு.

கணவனைப் பற்றி நினைப்பதை நிறுத்தி விட்டு விமான நிலையத்திற்கு வந்திருந்தவர்களை நோட்டம் விட்டாள் அவள்.

“ஹலோ இந்து...!”

தன்னைக் கூப்பிடுவது யாரென்று அவள் திரும்பினால், விஜயா நின்று கொண்டிருந்தாள். விஜயாவைப் பார்த்ததும் அவளுக்குப் பொறாமையாய் இருந்தது. தன்னை விட அன்று அவள் நன்றாக அலங்கரித்துக் கொண்டு வந்திருந்ததாகத் தோன்றியது அவளுக்கு. வரப் போகும் மன்மதனை விஜயா தன்னோடு அழைத்துக் கொண்டு போய் விடுவாளோ என்று கூடப் பயமாக இருந்தது. இந்துவும் விஜயாவும் பேசிக் கொண்டிருக்கும்போதே ஹேமா நுண்கலைக் கழகக் காரியதரிசியின் மனைவி வந்தாள்.

“உனக்குத் தெரியுமா இந்து? குமுதசந்திரனுடைய ‘வசந்த காலத்து இரவுகள்’ கவிதைத் தொகுதி பிரெஞ்சிலே மொழி பெயர்ப்பாகி நல்ல விற்பனையாம். உனக்குத் தெரிஞ்சிருக்க ணுமே இது? நீதான் கவிஞருடைய பள்ளித் தோழியாச்சே? உனக்குத் தெரியாதது என்ன இருக்கு” என்று ஹேமா தன்னிடம் கூறிய போது, அவள் தன்னைக் கிண்டல் செய்கிறாளா அல்லது சுபாவமாகத்தான் பேசுகிறாளா என்பதைப் புரிந்து கொள்ள முடியாமல் இந்து திணறினாள்.