பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/250

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

872

நா. பார்த்தசாரதி சிறுகதைகள்

“மன்னிக்கணும் இந்து! எனக்கு வீடுன்னு எதுவுமே கிடையாது. நான் ஒரு புகழ் பெற்ற நாடோடி.”

“சும்மா ஒரு உபசாரத்துக்காக இப்படி நீங்கள் சொல்லிக்கலாம்!”

“உபசாரமில்லை. நிஜமே அதுதான்...”

“எங்களைப் போல் உங்களால் கொள்ளை கொள்ளப்பட்ட ரசிகைகளின் வீடுகள் எல்லாம் உங்களுடையவையாயிருக்கும் போது நீங்கள் எப்படி நாடோடியாயிருக்க முடியும்?”

”என்னைக் கொள்ளைக்காரன் என்கிறீர்களா?”

“இல்லை, நீங்கள் இப்படிப்பட்ட கொள்ளைக்காரராவதை நாங்களே விரும்புகிறோம்.”

“என்ன சொல்கிறீர்கள்? புரியவில்லையே?”

அவள் மறுபடியும் புன்னகை செய்தாள். அவசியமில்லாமலே சரியாத தோள் புடவையைச் சரிய விட்டு மறுபடியும் நேர் செய்து அணிந்து கொண்டாள்.அங்கேயே பிடிவாதமாக எதற்காகவோ நின்றாள்.

அவன் மறுபடி கொட்டாவி விட்டான். ஒரு நிமிடம் திரும்பி நடந்து புன்னகையோடு மீண்டும் எதற்கோ தயங்கினாற் போல் நின்று விட்டு,”சரி தூங்குங்கள். ஒன்றே கால் மணிக்கு எழுப்புகிறேன்” என்று கூறியபடி மெல்ல வெளியேறினாள் அவள்.

அவள் வெளியேறும் போது கதவைச் சற்று அதிகமாகவே அழுத்திச் சாத்தியிருக்க வேண்டும். அவ்வளவு அதிக ஒசை அவனுக்குப் பிடிக்காது. காதைக் குத்தியது. எப்போதும் இனிய இங்கிதமான ஓசைகளில் லயிப்பவன் அவன்,

பகல் உணவுக்கு எழுப்ப இந்து வரவில்லை.வேலைக்காரிதான் வந்தாள். இந்துவின் வெண் தந்த நிற முகத்தையும், தோள்களையும் விட இவளுடைய கோதுமைநிறம் அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது. அந்த நிறம் வெறும் நாசூக்கைத்தான் காட்டும். இந்த நிறமோ ஆரோக்கியத்தின் அடையாளம். அவன் தன்னையே வைத்த கண் வாங்காமல் பார்ப்பது கண்டு அவள் சிரித்தாள். அந்தச் சிரிப்புக் கபடமில்லாத லட்சுமிகரமான சிரிப்பாயிருந்தது. அவளுடைய பல் வரிசை இடைவெளியில்லாமல் முத்துக்களைக் கோத்தது போலிருந்தது. அவளிடம் ஏதாவது பேசவேண்டும் போல் ஆசையாயிருத்து அவனுக்கு. அவன் பேசுவதற்குள் அவளே பேசி விட்டாள். “அம்மா உங்களைச் சாப்பிடக் கூப்பிட்டாங்க.”

“அது சரி. நீ நன்றாகப் பூத் தொடுப்பாயாமே?”

“ஆமாம் உங்களுக்குத் தொடுத்துத் தரட்டுமா? நான் பூத் தொடுப்பேன்னு அம்மா சொன்னாங்களா?”