18
நித்திலவல்லி / முதல் பாகம்
“மதுராபதி வித்தகருடைய இருப்பிடத்தை அறிய விரும்பும் நீங்கள் ஐயப்பாட்டுக்கு இடமில்லாத நல்லெண்ணத்தோடு தான் அதைக் கேட்கிறீர்கள் என்று உங்கள் குலதெய்வத்தின் மீது ஆணையிட்டுச் சத்தியம் செய்ய வேண்டும்! செய்வீர்களா?”
“துரோகிகள் செய்ய வேண்டிய சத்தியத்தைப் பாண்டிய குலம் ஒளி பெற பாடுபடும் நல்லவன் ஒருவனையே செய்யச் சொல்கிறாய் நீ. ஆனாலும் நான் அதைச் செய்கிறேன்! எனக்குக் காரியம் ஆக வேண்டும்.”
அவன் அவள் கூறியபடி சத்தியம் செய்ததும் அவள் கூறினாள்: .
“நீங்களும், நானும், இவ்வூராரும் எல்லாருமே பாண்டிய குலம் ஒளி பெறத்தான் பாடுபடுகிறோம். இப்படிப் பாடுபடுகிறவர்களை அவர்கள் எங்கிருந்தாலும் தேடித் தேடிக் கொல்வதற்காகவே களப்பிரர்கள் பூத பயங்கரப் படையை ஏவியிருக்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா? மீண்டும் பாண்டியராட்சி மலரப் பாடுபடுகிறவர்களின் இருப்பிடத்தை ஒற்றறிவது, பாண்டியருடைய குலத்தின் மேல் விசுவாசம் உள்ளவர்கள் அகப்பட்டால் எந்த நீதி விசாரணையும் இன்றி அவர்களை உடனே கொன்று விடுவது ஆகிய காரியங்களைச் செய்வதற்காகவே பூத பயங்கரப் படை உண்டாக்கப்பட்டிருக்கிறது. அந்தப் படையிலும் உங்களைப்போல் வலிமையும் வனப்பும் வாய்ந்த இளைஞர்கள் இருக்கிறார்கள். அவர்களும் மதுராபதி வித்தகரின் இருப்பிடத்தைத் தேடி அலைகிறார்கள். நீங்கள் அவர்களில் ஒருவரா, நம்மவர்களில் ஒருவரா என்று தெரியாத பட்சத்தில் இந்த ஊரில் யாரும் உங்களுக்குப் பதில் சொல்லியிருக்க மாட்டார்கள். நான் துணிந்து பதில் சொல்லிப் பெரியவர் இருக்கும் இடத்துக்கு வழியும் சொல்ல முன் வந்திருப்பதற்குக் காரணம் உண்டு...”
“என்ன காரணமோ?”