பக்கம்:நூறாசிரியம்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

90

நூறாசிரியம்

நகைப்புக்குரிய தெனினும், தன் அவலங் கருதுமிடத்து நகையும் வருவியாத, ஒன்று என்றுங் கொள்க.

அழுகையும் விளையாது: தான் இறத்தற் கேதுவாகிய தன்மையின் தலைவனைத் துறக்க எனக் கூறியது அழுகையை வருவிப்ப தென்னினும், அஃது அறியாமையாற் கூறியதாகலின், துன்பத்தையும் விளைவியாது என்றாள் என்க.

பகையுங் கொள்ளாது: பகையைப் போலும் தான் இறந்து படுவதாகியதோர் உத்தியைக் கூறினளேனும், அது தன் நலங் கருதிக் கூறிய கூற்றே ஆகலான் பகை கொள்ளுதற் கிடந்தர வில்லை என்றாள்.

உறவும் பாராது : இனி, தன் நலங்கருதி அன்பால் கூறிய கூற்றாகி உறவுமுறைக்கு உறுதி பயப்பதேனும், தன் உயிர் கெடுமாறு கூறியதாகலின் உறவு நோக்கியும் அது கொள்ளப்படுவ தன்று என்றாள் என்க.

திகைப்பல் யானே: இவ்வாறு ஒரு புறம் நகைப்பிற்கும் மறுபுறம் அழுகைக்கும், ஒரு புடை பகைக்கும் மறு புடை உறவுக்கும் உரியதாகிய அன்னையினது கூற்றின் மெய்ப்பொருள் தேராது திகைக்கின்றேன் யான் என்றவாறு.

திகைதல்-திசைதல்-மயங்குதல்-வேறுபாடு உணராது தடுமாறல்.

முகில்திரி விசும்பிற் கயிறாடு தொம்பர் கைக்கழி யன்ன:

முகில் திரிகின்ற வானத்திடைக் கயிற்றின் ஆடும் தொம்பர் தம்மை நிலை நிறுத்த வைத்துக் கொள்ளும் கைக்கோல் போல்,

கயிற்றில் ஆடும் தொம்பர் கைக்கழியை துறக்குமிடத்து, அஃது உயிர்க்கூறு விளைத்தல் போல். உயிர்க்குப் பற்றுக்கோலாய் விளங்கும் தன் தலைவனைத் துறப்பதும் தன் உயிர்க்கு ஊறு விளைவிக்குமாகலின், அஃது தன்னை இறப்பக் கூறியதே ஆகும் என வேண்டி உயிராடு காதற்கு ஊன்று கோலன் என்றாள்.

விசும்பிற் கயிற்றின் மேல் ஆடும் தொம்பருக்கு, மெல்லியதாய் நிலத்தின் மேற் பாவாது உறுவாரிடைத் தொடர்பற்றுத் தனிமையில் விளங்குகின்ற உடல் என்னும் கயிற்றின் மேல் நின்றாடும் உயிரையும், தொம்பர் பற்றும் கைக்கழிக்குத் தன் உயிர் பற்றிக் கொள்ளும் தலைவனையும் உவமை கூறினாள் என்க.

இனி, தன் தலைவனைத் துறந்துவிடக் கூறுவது, கயிற்றின் மேல் நின்றாடும் தொம்பனை நோக்கி அவன் பற்றியுள்ள கைக்கழியினைத் துறந்து விடு என்று கூறுவதற் கொப்பாகும் என்றாள் என்க. அஃது அவன் இறந்து விடற்கு ஏதுவாவது போலவே, தன் காதலனைத் துறப்பதும் தன் இறப்பிற்கு ஏதுவாகும் என்றும், உணர்த்தினாள் என்க.

உடலைக் கொடிக்கு உவமையாகக் கொள்வதற் கொப்ப ஈண்டுக் கயிற்றுக்கு உவமை கூறப்பெற்றது. தன் விருப்பிற்கேற்பப் பின்னிக்-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூறாசிரியம்.pdf/116&oldid=1221562" இலிருந்து மீள்விக்கப்பட்டது