யர் தாம்—இவ்வாறு இந்நாட்டு மக்களைப் பற்றியும் அவர்தம் சமுதாயச் சீர்கேடுகளைப் பற்றியும் குறித்துள்ளனர். “நல்ல இயற்கை வளமுடைய நாட்டு மக்கள் பல சூழல்களால்—வாழ்க்கை அமைப்பு முறைகளால் சமுதாய வேறுபாடுகளால் நிலைகெடுகின்றனர்”[1] என்றும், “அரச அரண்மனையைக் காணாது ஏழை மக்கள் குடிசையைக் காணல் வேண்டும்; அவர்களுக்கு உரிமை வழங்கும் ஆட்சி அமைய வேண்டும்”[2] என்றும், “மக்கள் அடிமை வாழ்வு நாட்டு வாணிபத்தை வளர்க்கவில்லை; அம்மக்களிடையில் படிக்கும் நிலையிலும் கல்வி அமைப்பிலும் ஏற்றத் தாழ்வு கூடாது“[3] என்றும் பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஆளுவோர் கொள்ள வேண்டிய வரன்முறை, நாட்டுநிலை முதலியவற்றை விளக்கியுள்ளனர். இந்தச் சூழலிலேதான் நாமும் நுழைந்து அந்த நூற்றண்டின் தமிழ் உரைநடை வளர்ச்சியைக் காண நிற்கின்றாேம். 1797 ஆம் ஆண்டில் ஆங்கிலேயர் இந்நாட்டுப் பல்வேறு வகை நிலைகளை ஆராய ஒரு குழுவினை ஏற்படுத்திப் பல உண்மைகளைக் கண்டனர். சிவில், கிரீமினல் அமைப்பு முறை செம்மை செய்யப்பெற்ற காலமும் அதுவே.
கல்வி, தொழில் முதலியலற்றிலும் அக்காலம், நாடு தலைதூக்கி வளர ஆரம்பித்த காலமாகும். கிறித்துவ சமயத்தவர் அக்காலத்தில் நாட்டின் பல பாகங்களிலும் கால் கொண்டு வளரத் தொடங்க, 'செல்விருந்தோம்பி வருவிருந்து நோக்கும்' தமிழ் மக்களும் மன்னரும் அவர்கள் இருக்கவும் வளரவும் தம் சமயத்தை வளர்க்கவும் உதவினர். மேலே கண்டபடி நம் நாட்டிற்கு வந்த பல்வேறு மேலை நாட்டு மக்கள் இந்நாட்டுக் கலை, வாழ்வு, செயல் முறைகளை ஆராய்ந்து வெளியிட்டுத் தாமும் பயன் பெறலாயினர். நாட்டு ஆட்சி முறையிலேயும் பல மாற்றங்கள் நேர்ந்தன. 1784 இல் கவர்னர்–ஜெனரலுக்கு முழு உரிமை