விளையாட்டுத்துறை பற்றிய இலக்கிய நூல் வரிசையில் இந்நூல் எனது 160வது படைப்பாகும்.
மானிடராகப் பிறந்தவர்கள் அனைவரும் பெயரும் புகழும் பெற்று வாழ வேண்டும் என்று விரும்புகிறார்கள். அதற்காகப் பெரிதும் முயன்று வருகின்றார்கள். ஆனாலும் அதில் வெற்றி பெறுபவர் வெகு சிலரே ஆவார்கள். எப்படியும் வாழ்ந்துவிடலாம் என்று நினைப்பவர் பலர். ஆனால் ஒரு சிலரே தாம் வாழ வேண்டிய வாழ்க்கை முறையினை ஒரு வரையறைக்குள் - கட்டுப்பாட்டுக்குள் - நெறிமுறைக்குள் வைத்து வாழ்ந்து அதில் வெற்றியும் பெறுகின்றார்கள். அவ்வாறு வெற்றி வாழ்க்கை பெற்றவர்களுக்கு அடிப்படையாக அமைந்திருப்பது அவர்களது உடல்தான். உடல் நலம்தான். பலம் தான்.
அந்த உடலானது பலம் பெற்று இருந்தாலே உண்மையான உடலாக விளங்கும். அந்தப் பலம் பெறுவதற்குப் பயிற்சிகள் மிகமிக அவசியம்.
இன்றைய நாகரீக வாழ்க்கையில் தினமும் அதற்காக நேரம் ஒதுக்கவோ - செலவு செய்யவோ யாரும் விரும்புவதும் இல்லை. ஒரு சிலருக்கு வாய்ப்பும் கிடைக்கவில்லை என்று புலம்புபவர்கள் பலர். ஆனால் அந்த வாய்ப்பை நாம்தான் உருவாக்க வேண்டும். ஒதுக்க வேண்டும் என்ற உண்மையினை யாருமே உணர்வதில்லை.
இன்றைய அவசரமான காலத்தில் வாழும் நாம் இதற்கென நீண்ட நேரம் ஒதுக்காவிடினும் 10 நிமிடமாவது ஒதுக்கி நம் உடலைப் பலம் பெற பயிற்சி அளிக்க வேண்டியது அவசியமாகும்.
நோய் வந்தபின் மருத்துவரின் ஆலோசனையின் படி அதிகாலையில் ஓடுதல், நடத்தல் என மேற்கொள்வதைவிட,