உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பழைய கணக்கு.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
விசநாதன் வந்துகுது

கிராமத்தில் அப்பாவுக்குச் சொந்தமாக ஐந்து ஏக்கர் நிலமும் பெரிய வீடும் இருந்த போதிலும் அதற்கேற்ற மாதிரி நிறையக் கடனும் பட்டிருந்தார். மாம்பாக்கத்திலேயே எங்களுடையதுதான் பெரிய வீடானதால் எங்களைப் “பெரிய வீட்டுக்காரர்” என்று சொல்வார்கள்.

என் சகோதரிகள் இருவருக்குமே ஏக தடபுடலாக, தெருவை அடைத்துப் பந்தல் போட்டு, வெளியூர் நாதஸ்வரம், நாதமுனி பாண்டு, வாணவேடிக்கையோடு கலியாணம், ஐந்து நாட்கள் ‘ஜாம் ஜாம்’ என்று நடந்தது.

வாசல் திண்ணையில் இரண்டு சந்தனக்கல் போட்டு இரண்டு வேலைக்காரர்கள் ஓயாது சந்தனம் அரைத்தபடி இருந்தனர். கலியாண வீட்டில் விருந்து சாப்பிட்டு விட்டுப் போகிறவர்கள் யாராயிருந்தாலும் மார்பில் சந்தனம் பூசாமல் போகமாட்டார்கள்!

“பந்து மித்திரர்களுடன் நாலு நாள் முன்னதாகவே வந்திருந்து தம்பதிகளை ஆசீர்வதிக்க வேணுமாய்க் கோருகிறேன்” என்று சம்பிரதாயமாக அழைப்பிதழில் குறிப்பிட்டிருந்த போதிலும் பத்து நாள் முன்னதாகவே வந்து விட்ட பந்து மித்திரர்கள் கலியாணம் முடிந்த பின்னரும் பத்து நாள் இருந்து விட்டுப் போனார்கள்! ”பெரிய வீட்டில் பெரிய தோரணையில் வாழ்க்கை அமைந்து விட்டதால் என் தந்தையார் எதிர்காலம் பற்றிய சிந்தனையே இல்லாமல், என்னைப் பற்றிய கவலையும் இல்லாமல் வாழ்ந்து விட்டார்.

வட்டிக்கு வட்டி குட்டி போட்டுக் கடன் பளு தாங்க முடியாத அளவுக்குப் போன பிறகு வீடு வாசல், நிலம் எல்லாவற்றையும் ஒவ்வொன்றாக விற்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பழைய_கணக்கு.pdf/128&oldid=1146119" இலிருந்து மீள்விக்கப்பட்டது