உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பழைய கணக்கு.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

135

கிராமப் புறங்களில் நில அடமான பாங்குகள் ரொம்பவும் சுறுசுறுப்பாக இயங்கி வந்த காலம் அது. கூட்டுறவு சொஸைட்டி என்ற பெயரில் அவை ஏழைகளுக்குக் குறைந்த வட்டிக்குக் கடன் கொடுத்து உதவி வந்தன. அதன் தலைமை அலுவலகம் வேலூரில் இருந்தது. என்னுடைய கிராமமான மாம்பாக்கத்தில் அதன் கிளை ஒன்று இருந்தது. என் தந்தைதான் அதற்குப் பொறுப்பாளர். அவருக்கு மாதச் சம்பளம் ஏழு ரூபாய்.

கடன் வாங்கியவர்கள் திருப்பித் தரும் தொகையை அவ்வப்போது வேலூர் தலைமை பாங்குக்கு அனுப்பி விடுவார். பணம் நூற்றுக்கணக்கில் இருக்கும் ஆதலால் மணியார்டராக அனுப்பாமல் இன்ஷூரன்ஸ் கவரில் வைத்துத் தைத்து அந்தத் தையல் முடிச்சின் மீது அரக்கு ஸீல் வைத்து அனுப்புவார். அரக்கை நெருப்பில் காட்டி இளக வைப்பதும், அந்த இளகிய மெழுகைக் கவர் மீது அகலமாய் குங்குமப் பொட்டு போல் வைத்து அவற்றின் மீது ஸீலைப் பதிய வைப்பதும் எனக்குப் பிடித்தமான வேலை.

எங்கள் ஊரில் தபாலாபீஸ் கிடையாது. ஆகையால் மாம்பாக்கத்திலிருந்து நான்கு மைல் தொலைவில் உள்ள வாழைப் பந்தல் போஸ்ட் ஆபீஸுக்குப் போய் போஸ்ட் மாஸ்டரிடம் அந்த ஸீல் வைத்த கவரைத் தந்து ரசீது பெற்று வர வேண்டும். வாரம் ஒரு முறை வாழைப்பந்தலுக்குப் போய் வர நாலணா கூலியாகக் கிடைக்கும். அந்த வேலையை நான்தான் செய்து வந்தேன்.

வாழைப் பந்தல் போக வேண்டிய நாட்களில் காலையில் எழுந்து, உலர்ந்த கிச்சிலிக்காய் ஊறுகாயுடன் பழையது. சாப்பிட்டு விட்டு அந்தக் கோட்டை எடுத்து மாட்டிக் கொள்வேன். அப்பா இன்ஷூரன்ஸ் கவரைக் கோட்டின் உள் பாக்கெட்டில் வைத்து கோட்டின் மீது ஒரு கயிற்றால் என் உடம்போடு சேர்த்துப் பந்தோபஸ்தாகக் கட்டி விடுவார்.

கூலியாகக் கிடைக்கும் அந்த நலணாவில் எப்போதாவது காலணா அரையணா நானகவே அப்பாவுக்குச் சொல்லாமல் செலவு செய்துவிட்டு அப்பாவிடம் திட்டும் குட்டும் வாங்கிக் கொண்ட நாட்களும் உண்டு. வாழைப்பந்தல் போய் வருவது என்றால் எனக்கு வாழைப்பழம் சாப்பிடுகிற மாதிரி. காரணம், அந்தக் காலத்தில் என்னைக் கவர்ந்த டோக்கியா கின்ஸா வாழைப்பந்தல் கடைவீதிதான்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பழைய_கணக்கு.pdf/136&oldid=1146127" இலிருந்து மீள்விக்கப்பட்டது