பக்கம்:பழைய கணக்கு.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

148

கரும்புச் சாற்றை இரும்புக் கப்பரையில் ஊற்றி, மணிக்கணக்கில் காய்ச்சி, வெல்லப் பாகு பக்குவ நிலைக்கு வரும் போது பொன் பதமாக அந்தப் பாகைப் பலகைக் குழியில் ஊற்றி வெல்லம் தயாரிப்பது ஓர் அபூர்வக் கலை. அந்தக் கலையில் நான் கைதேர்ந்த அனுபவசாலியாகி விட்டேன்.

கப்பரையில் எத்தனை குடம் பால் ஊற்ற வேண்டும்? பால் காயும் போது திரண்டு வரும் அழுக்கை எப்படி அகற்ற வேண்டும்? வெல்லப்பாகு பக்குவம் பெறும் நேரம் தெரிந்து எப்போது அதைப் பலகைக் குழியில் ஊற்ற வேண்டும்? இவ்வளவும் எனக்கு அத்துபடி.

மாங்காய், தேங்காய் இவற்றைக் கோப்பரை வளையத்தில் கட்டித் தொங்கவிட்டுக் கொதிக்கும் வெல்லப் பாகோடு சேர்த்துப் பதமாக வேகவைத்ததும் அவற்றை எடுத்துச் சாப்பிடுவதில் தனி மகிழ்ச்சி அடைவோம். இது கூடக் கொஞ்ச நாட்களுக்குத்தான். அப்புறம் இனிப்புப் பண்டங்களே திகட்டிப் போகும்.

குடிசையிலிருந்து மணக்கும் அம்மா சமையலும், கப்பரையில் கொதிக்கும் வெல்ல வாசனையும் சேர்ந்து மூக்கைத் துளைக்கும்.

இனிப்புக்கு ஒரு மாற்றாக அம்மா எனக்கும் என் தந்தைக்கும் காரமான சமையலாகவே செய்து போடுவார். பொறிக் கொள்ளு, கார அடை, அதற்குத் தொட்டுக் கொள்ள மிளகாய் சட்னி இத்தியாதி......

நல்ல வெயில் வேளையில் சில்லென்ற கிணற்று நீரில் இறங்கி நீச்சலடித்துக் குளித்து விட்டுக் கரையேறும் போது பகாசுரப் பசி எடுத்து விடும்.

அந்தப் பசி வேளைக்கு அம்மா சமைத்துப் போடும் உணவு தேவாமிருதமாயிருக்கும். சாப்பாட்டுக்குப் பின் ஒரு தூக்கம் போடத் தோன்றும்.

இம்மாதிரி ஒரு மாதம் அல்லது நாற்பது நாட்கள் பொழுது போவதே தெரியாமல், கரும்புச் சாகுபடி வேலையில் மூழ்கி விடுவோம்.

திடீரென்று ஒருநாள் மாமா அனுப்பிய மாடுகளில் ஒன்று கீழே விழுந்து கால்களை உடைத்துக் கொண்டது. வாயில் நுரை நுரையாய்ப் பொங்கி வழிந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பழைய_கணக்கு.pdf/149&oldid=1146141" இலிருந்து மீள்விக்கப்பட்டது