பக்கம்:பழைய கணக்கு.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



இயக்குனர் பாலசந்தரின் முன்னுரை

வாராவாரம் தொடர்ந்து சாவி பத்திரிகையில் இந்தப் பழைய கணக்கின் பல பகுதிகளை நான் பார்த்திருக்கிறேன். அப்பொழுது தனித் தனிக் கட்டுரையாக வாசித்தபோது சுவையாக இருந்த அந்தக் கட்டுரைகள் இப்பொழுது ஒரு புத்தகமாகப் படிக்கிற போது இன்னும் அதிகமான சுவையோடு ஒரு சுயசரிதை என்கிற பரிமாணத்தில் நம் மனக் கண் முன் சம்பவங்களாக விரிகின்றன.

புள்ளி விவரங்களையும், தேதிக் குறிப்புகளையும் அடுக்கிக் கொண்டே போய் சம்பவங்களை அகராதி மாதிரி வரிசைப் படுத்திக் கொண்டே போனால் தான் சுயசரிதையா?

இந்தப் பழைய கணக்கும் ஒரு வகை சுயசரிதைதான்!

சாவியின் கிராமத்திற்கு ஒரு குறத்தி வருகிறாள். இளம் வயது. வசீகரமான தோற்றம். அவளிடம் பச்சை குத்திக் கொள்ள வேண்டும் என்று. அவருக்கு ஓர் ஆசை எழுகிறது. அரையணா கொடுத்து பச்சை குத்திக் கொள்கிறார் சிறுவனாய் இருந்த சாவி. இந்த நிகழ்ச்சியை சாவி விவரிக்கும் போது அந்தக் குறத்தியைத் தேடிப்பிடித்து நாமும் பச்சை குத்திக் கொள்ளலாமா என்கிற ஏக்கம்தான் மேலிடுகிறது. இந்த நிகழ்ச்சியின் முடிவில், அவள் போன பிறகு மாம்பாக்கமே ஒளி இழந்த மாதிரி எனக்குப் பட்டது என்று அவர் முடித்திருந்த இடத்தில் எனக்கு ஒரு சிறுகதை தெரிகிறது.

‘இரண்டும் கெட்டான் வயதில் செய்து விட்ட அசட்டுத்தனம் ஆயுள் முழுவதும் நிரந்தரமாகி விட்டது’ என்று அவர் குறிப்பிடும் பொழுது ஒரு தத்துவம் நிலைபெறுகிறது.

தன்னுடைய இளம் வயதில் ஊரைவிட்டே ஓடிவிட்ட பையனுக்காக வேண்டிக் கொள்ளும் தந்தை, இவர் திரும்பி வந்ததும் பல வைதீகர்களைக் கூப்பிட்டு சாப்பாடு போட்டுப் பரிகாரம் செய்கிறாா். சாப்பிட்டுவிட்டு உட்கார்ந்திருக்கும் ஒரு பெரியவர், “அடிக்கடி காணாமல் போய்க் கொண்டிருடா. எங்களுக்கு இது போல் சாப்பாடு கிடைத்துக் கொண்டே இருக்கும்” என்று கூறுகிற கட்டுரையில் ஈகைச்சுவை மட்டுமல்ல, அவர்களது பொருளாதாரமும் புரிகிறது.

இதுபோல் சாவி என்கிற சிறுவன்,

சாவி என்கிற நேர்மையாளர்,

சாவி என்கிற adventurist,

சாவி என்கிற வாலிபர்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பழைய_கணக்கு.pdf/5&oldid=1145637" இலிருந்து மீள்விக்கப்பட்டது