எனது மிக நெருங்கிய நண்பர்களுள் தி. ஜ. ரங்கநாதனும் ஒருவர். நானும் அவரும் 1936ல் ‘ஹநுமான்’ பத்திரிகையில் சேர்ந்து வேலை பார்த்தவர்கள். சில நாட்கள் கழித்து நான் அந்த வேலையை விட்டு விட்டேன். ஆனாலும் தி. ஜ. ர. வையும் அவர் தங்கியிருந்த ஓட்டல் அறையையும் விடவில்லை.
வேலை எதுவுமில்லாமல், மேற்கொண்டு என்ன செய்வதென்று புரியாமல் நாட்களைத் தள்ளிக் கொண்டிருந்தபோது ஒரு நாள் தி. ஜ. ர. வுக்கு பளிச் சென்று ஓர் யோசனை உதித்தது.
“ஓய்! நீர் உடனே ஒரு புதுப் பத்திரிகை ஆரம்பியும். ‘கத்தரி விகடன்’ என்று அதற்குப் பெயர்” என்றார்.
“கத்தரி விகடனு!” என்று ஆச்சரியப்பட்டேன் நான்.
“ஆமாம். ஆனந்த விகடனுக்குப் போட்டி. இந்தப் பெயரில் இன்னொரு வசதியும் உண்டு, மற்றப் பத்திரிகைகளில் வரும் சுவாரசியமான விஷயங்களைக் கத்தரியால் வெட்டி இதில் வெளியிடலாம். டைஜஸ்ட் மாதிரி. பிற இதழ்களிலிருந்து விஷயங்களைக் கத்தரித்துப் போடுவதால் ‘கத்தரி விகடன்’ என்று பெயர் வைப்பது பொருத்தமாக இருக்கும்.” என்று அவர் விளக்கினார்.
இதன் தொடர்பாக நேரக் கூடிய இன்னொரு லாபத்தையும் தி. ஜ. ர. எதிர்பார்த்தார். “‘விகடன்’ என்ற பெயரோடு இன்னெரு பத்திரிகை வெளிவருவதை ஆனந்த விகடன் வாசன் நிச்சயம் விரும்ப மாட்டார். எனவே ‘கத்தரி விகடன்’