248 இ. புலவர் கா. கோவிந்தன் தோழி! கணவன்மார் கைவிட்டுப் போகாராக, அவரோடு கூடி வாழும் பெரும் பேறு பெற்ற மகளிர், அக் கணவரோடு சென்று, வையை யாற்றின் நடுவே அமைந்த வளம் பெருகும் ஆற்றிடைக் குறைக்கண் நிகழும் காமவேள் விழாக்கண்டு களி மகிழும் காலமல்லவோ, நம் கணவர் வருவேன்' எனக் கூறிச் சென்ற காலம் ? விழாவிற்குச் செல்வார்போல், விளங்கும் அணி பல அணிந்து நிற்கும் தோழி! அதோ காண், இளங் காதலர் இணை இணையாகச் செல்லும் காட்சியை. நம் கணவர் கூறிச் சென்ற காலம் இதுவே. அக் காலம் வந்து விட்டது. அவர் வந்திலர். வருந்துகிறது என் உள்ளம். யான் என் செய்வேன்? தோழி! வருவேன் என்று அவர் கூறிச்சென்ற காலம், உலகத்தார் அனைவரும் ஒருங்கே புகழ்ந்து பாராட்ட வல்ல பெருமை மிக்க நம் கூடல் நகர் வாழ் மக்கள், வேனில் விழவின் ஒரு பகுதியாய், நம் மாநகர்ப் புலவர்கள் கூட்டும் பேரவைக் கண் இருந்து, அப்புலவர் பெருமக்கள் ஆக்கிய புதுப்புதுப் பாடல்களைக் கேட்டும், அவற்றின் பொருள் நயம் அறிந்தும் மகிழும் காலமன்றோ? தோழி! அதோ பார், அப் புலவர் பேரவையில் பாட்டோசையும், பாராட் டோசையும் மாறி மாறி எழுகின்றன. அவர் கூறிச் சென்ற காலம் வந்து விட்டது. அவர் வந்திலர். யான் என் செய்வேன்? எங்ங்னம் வாழ்வேன்?" எனப் பலப்பல கூறிப் புலம்பினாள். 'குயிலின் குரலும், வண்டுகளின் ஆரவாரமும், புலவர் பேரவையும், ஆற்றிடைக் குறையின் அழகிய காட்சியும் அவர் கூறிச் சென்ற காலத்தை நினைப்பூட்டி வருத்த, யான் ஆற்றியிருத்தல் எவ்வாறு இயலும்? எனக் கூறி வருந்துவாளைத் தேற்றும் வழி காணாது கலங்கி