பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/559

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

557


“பாண்டவர்கள் ஐவரையும் கொன்று அவர்கள் தலைகளைச் சமந்தபஞ்சக மலைக்குக் கொண்டுவந்து காட்டுவதாகத் துரியோதனனுக்கு வாக்குறுதி அளித்து விட்டேன். அந்த வாக்குறுதியை இனி எப்பாடுபட்டாவது நிறைவேற்றித் தீரவேண்டும். நிறைவேற்றத் தவறிவிட்டால் என் வாழ்வே பயனற்றதாகிவிடும். கடைசியாக எனக்கு ஒரே ஒரு வழி புலப்படுகிறது. இறைவன் என்னைக் கைவிடமாட்டான். பாண்டவர்களை அழிக்கும் வலிமை வாய்ந்த அஸ்திரத்தைக் கொடுக்குமாறு இறைவனை எண்ணித் தவம் செய்கிறேன்” இந்தத் தீர்மானத்துடன் அந்த ஆலமரத்தடியில் அமர்ந்து மனத்தை ஒருமுகப்படுத்தி இறைவனை எண்ணித் தவம் செய்யலானான். அவன் தவம் பலித்தது. இறைவன் அவன் முன் தோன்றி, “அசுவத்தாமா! என்னை எதற்காக எண்ணினாய்! உனக்கு என்ன வேண்டும்?” என்று கேட்டான். “இறைவா! நீ கருணை வடிவினன். என் வரத்திற்குச் செவி சாய்த்து அருள். பாண்டவர்களைக் கொல்வதற்கு எனக்கு ஓர் அஸ்திரத்தைக் கொடுத்து உதவு” என்றான். இறைவன் அவனுடைய விருப்பப்படியே ஓர் அஸ்திரத்தைக் கொடுத்து விட்டுச் சென்றான்.

இறைவனின் அஸ்திரத்தை அடைந்த அசுவத்தாமன் புதிய ஊக்கம் பெற்றுக் கிருபனையும், கிருதவன்மாவையும் உடன் கூட்டிக்கொண்டு திரும்பவும் பாண்டவர்கள் பாசறையை நோக்கிச் சென்றான். மறுபடியும் இவர்கள் வருவதைக் கண்டு பூதம் ஆவேசமாகப் பாய்ந்தது. ஆனால் அசுவத்தாமன் தன்னிடமிருந்த தெய்வீக அஸ்திரத்தைக் காட்டியவுடன் பூதம் பயந்து போய் அங்கிருந்து ஓடிவிட்டது. பூதம் ஓடியபின் தன்னோடு வந்திருந்த இருவரையும் பாசறை வாயிலில் காவல் வைத்துவிட்டு ஆயுதங்களோடு தான் மட்டும் பாசறைக்குள் நுழைந்தான் அசுவத்தாமன்.

அவன் எதிர்பார்த்தது போல் பாண்டவர்கள் பாசறையில் இல்லை. படை வீரர்களும் தளபதி