146
விந்தன் கதைகள்
அவனை இடைமறிந்து, “ஏன்?" என்று கேட்டு வைத்தான் அப்பாவி மணி.
"போடா மண்டு! 'பீச்'சுக்கு எதற்காகப் போவார்கள்?’ என்று எரிந்து விழுந்தான் சங்கர்.
“எதற்காகப் போவார்கள்?’ என்று மணி அவனையே மீண்டும் திருப்பிக் கேட்டான்!
“காற்று வாங்குவதற்குத்தான்" "ஏன், இங்கெல்லாம் கூடத்தானே காற்று அடிக்கிறது?”
"அங்கே அடிக்கும் காற்றின் சுகமே வேறேடா இதோ பார், மேலே நீலவானம் இருக்கோ, இல்லையோ? அதே மாதிரி அங்கே ஒரு நீலக் கடல் இருக்கு. அதிலேயிருந்து ஜலம் அலைமேல் அலையாக் கிளம்பி, முத்துக்கள் தெறித்தாற் போலக் கரையிலே வந்து மோதும், அது பார்ப்பதற்கு எவ்வளவு அழகாயிருக்கும், தெரியுமா?”
“அதைப் பார்க்கக் கூடக் காசு கொடுக்கவேணுமாடா?”
"இல்லையடா, இல்லை. யாரு வேனுமானாலும் போய்ப் பார்க்கலாம்!"
மணியின் முகம் மலர்ந்தது. "அப்படியானால் நாளைக்கே தன்னை பீச்சுக்குக் கூட்டிக்கொண்டு போகும் படி அப்பாவை ஏன் கேட்கக் கூடாது?" என்று எண்ணிக் கொண்டான்.
ஆனால், அதற்கு அடுத்த கணமே அவனுடைய முகம் சுருங்கிவிட்டது. ஏனெனில் அந்தப் 'பாழும் அப்பா' யார் என்று அவனுக்கு இது நாளதுவரை தெரியவே தெரியாது. இத்தனைக்கும் அந்த மனிதன் இன்னும் செத்துப் போகவும் இல்லை!
அம்மாவைக் கேட்டாலோ, அவள் நாளுக்கு ஒரு விதமாகப் பதில் சொல்கிறாள். அவன் என்ன செய்வது?
“சரி, அம்மாவையே ஒரு நாளைக்குக் கூட்டிக் கொண்டு போகச் சொன்னால் போகிறது!” என்று தனக்குள் எண்ணிக் கொண்டு, மேலே சங்கரின் பேச்சைக் கேட்பதற்குத் தயாரானான்.
"அப்பாலேதான் பஜாருக்கு வந்தோம்; அங்கேதான் இந்தக் குதிரையை வாங்கினோம்!” என்று தன் கதையை முடிக்கும்போதும் நீட்டி முழக்கிக் கொண்டே முடித்தான் சங்கர்.