பக்கம்:விந்தன் கதைகள் 1.pdf/225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
சமுதாய விரோதி

ருஷந்தோறும் கோடை விடுமுறைக்கு முன்னால் பரீட்சை என்னும் பாதகத்தை நடத்தி முடித்துவிடும் அதிகாரிகளின் புத்திசாலித்தனத்தை எண்ணி வியந்து கொண்டே, புஷ்பராஜ் தன்னுடைய சொந்த கிராமமான தாழம்பேடுக்குப் புறப்பட்டான். ஏறக்குறைய இரண்டு மாதகாலம் அங்கே சகலவிதமான சலனமுமின்றி அமைதியுடன் காலத்தைக் கழித்துவிட்டு வரலாம் என்று நினைத்தபோது அவனுக்கு எவ்வளவோ ஆறுதலாயிருந்தது. முன்னாலாவது அந்தக் கிராமத்தில் சிலர் கள்ளையும் சாராயத்தையும் குடித்துவிட்டு வந்து அங்கங்கே சண்டையிட்டுக் கொண்டிருப்பார்கள். இப்போது அதுவும் இருக்காது; 'காந்தி ராசா'வின் புண்ணியத்தால் மதுவிலக்குச்சட்டந்தான் அமுலுக்கு வந்துவிட்டதே!

இவ்வாறு எண்ணி மகிழ்ந்த வண்ணம் புஷ்பராஜ் தன்னுடைய சொந்த கிராமத்தை யடைந்தபோது இருள் சூழும் நேரம். கிராமக் குடிசைகளெல்லாம் அநேகமாகப் புகைய ஆரம்பித்துவிட்டன. குடிசைகள் புகைய ஆரம்பித்து விட்டன என்றால் அவற்றிலுள்ள அடுப்புகள் புகைய ஆரம்பித்து விட்டன என்று அர்த்தம். அடுப்புகள் புகைந்தால் தானே அந்தக் குடிசைகளில் அடைப்பட்டுக் கிடக்கும் அப்பாவி ஜீவன்களுக்கு அடிவயிறாவது நிறையும்?

புகைந்து கொண்டிருந்த குடிசைகளுக்கு இடையிலே புகையாமலிருந்த சில குடிசைகளும் இருக்கத்தான் இருந்தது. அவற்றைக் கண்டதும் புஷ்பராஜுக்கு என்னவோ மாதிரி இருந்தது. "கள்ளரக்கன் ஒழிந்த பிறகுமா இந்தத் தரித்திரம்?" என்று எண்ணி அவன் ஒருகணம் ஏங்கினான். மறுகணம் "மதுவிலக்கால் மட்டும் மக்களின் வறுமையைப் போக்கிவிட முடியாதல்லவா?" என்று எண்ணியவனாய் மேலே நடந்தான்.

வழியில் ஒரு தேநீர்க் கடை குறுக்கிட்டது. அந்தத் தேநீர் கடையைக் கண்டதும் அதற்கு முன்னால் அங்கே இருந்த கள்ளுக்கடை புஷ்பராஜின் மனக்கண் முன்னால் காட்சியளித்தது. ஆடலும் பாடலும் அடிதடிச் சண்டையுமாக யிருக்கும் இந்த இடத்திலே, இப்போது அமைதி குடி கொண்டிருப்பதைக் கண்டதும் தன்னை மறந்த நிலையில் அவன் தேநீர்க் கடைக்கு முன்னால் சிறிது நேரம் அப்படியே நின்று விட்டான்.