பாரதியாரின் தெய்வப்பாடல்கள்/67. ஆரிய தரிசனம்

விக்கிமூலம் இலிருந்து

67. ஆரிய தரிசனம்

(ஓர் கனவு)

ராகம்-ஸ்ரீராகம் (தாளம்-ஆதி)

கனவென்ன கனவே-என்தன்
கண்துயி லாதுநனவினிலே யுற்ற (கன)

கானகம் கண்டேன்-அடர்
கானகங் கண்டேன்-உச்சி
வானகத்தே வட்ட மதியொளி கண்டேன். (கன)

பொற்றிருக் குன்றம்-அங்கொர்
பொற்றிருக் குன்றம்-அதைச்
சுற்றி யிருக்கும் சுனைகளும் பொய்கையும் (கன)

புத்த தரிசனம்

குன்றத்தின் மீதே-அந்தக்
குன்றத்தின் மீதே-தனி
நின்றதோர் ஆல நெடுமரங் கண்டேன். (கன)

பொன்மரத் தின்கீழ்-அந்தப்
பொன்மரத் தின்கீழ்-வெறுஞ்
சின்மய மானதோர் தேவன் இருந்தனன். (கன)

புத்த பகவன்-எங்கள்
புத்த பகவன்-அவன்
சுத்தமெய்ஞ் ஞானச் சுடர்முகங் கண்டேன். (கன)

காந்தியைப் பார்த்தேன்-அவன்
காந்தியைப் பார்த்தேன்-உப
சாந்தியில் மூழ்கித் ததும்பிக் குளித்தனன். (கன)

ஈதுநல் விந்தை!-என்னை!
ஈதுநல் விந்தை!-புத்தன்
சோதி மறைந்திருள் துன்னிடக் கண்டனன். (கன)

பாய்ந்ததங் கொளியே;-பின்னும்
பாய்ந்ததங் கொளியே;-அருள்
தேய்ந்த தென்மேனி சிலிர்த்திடக் கண்டேன். (கன)

கிருஷ்ணார்ஜுன தரிசனம்

குன்றத்தின் மீதே-அந்தக்
குன்றத்தின் மீதே-தனி
நின்ற பொற்றேரும் பரிகளும் கண்டேன் (கன)

தேரின்முன் பாகன்-மணித்
தேரின்முன் பாகன்-அவன்
சீரினைக் கண்டு திகைத்துநின் றேனிந்தக் (கன)

ஓமென்ற மொழியும்-அவன்
ஓமென்ற மொழியும்-நீலக்
காமன்தன் உருவும்,அவ் வீமனதன் திறலும். (கன)

அருள் பொங்கும் விழியும்-தெய்வ
அருள் பொங்கும் விழியும்-காணில்
இருள் பொங்கு நெஞ்சினர் வெருள்
பொங்குந் திகிரியும். (கன)

கண்ணனைக் கண்டேன்-எங்கள்
கண்ணனைக் கண்டேன்-மணி
வண்ணனை ஞான மலையினைக் கண்டேன். (கன)

சேனைகள் தோன்றும்-வெள்ளச்
சேனைகள் தோன்றும்-பரி
யானையுந் தேரும் அளவில் தோன்றும். (கன)

கண்ணன்நற் றேரில்-நீலக்
கண்ணன்நற் றேரில்-மிக
எண்ணயர்ந் தானொர் இளைஞனைக் கண்டேன். (கன)

விசையன்கொ லிவனே!-விறல்
விசையன்கொ லிவனே!-நனி
இசையும் நன்கிசையும் இங்கிவனுக் கிந்நாமம் (கன)

வீரிய வடிவம்!-என்ன
வீரிய வடிவம்!-இந்த
ஆரியன் நெஞ்சம் அயர்ந்ததென் விந்தை! (கன)

பெற்றதன் பேறே-செவி
பெற்றதன் பேறே-அந்தக்
கொற்றவன் சொற்கள் செவியுறக் கொண்டேன். (கன)

“வெற்றியை வேண்டேன்;-ஜய;
“வெற்றியை வேண்டேன்;-உயிர்
அற்றிடு மேனும் அவர்தமைத் தீண்டேன். (கன)

சுற்றங் கொல்வேனோ?-என்தன்
சுற்றங் கொல்வேனோ?-கிளை
அற்றபின் செய்யும் அரசுமோர் அரசோ?” (கன)

மிஞ்சிய அருளால்-மித
மிஞ்சிய அருளால்-அந்த
வெஞ்சிலை வீரன் பலசொல் விரித்தான். (கன)

இம்மொழி கேட்டான்-கண்ணன்
இம்மொழி கேட்டான்-ஐயன்
செம்மலர் வதனத்திற் சிறுநகை பூத்தான். (கன)

வில்லினை யெடடா!-கையில்
வில்லினை யெடடா!-அந்தப்
புல்லியர் கூட்டத்தைப் பூழ்தி செய்திடடா! (வில்)

வாடி நில்லாதே;-மனம்
வாடி நில்லாதே;-வெறும்
பேடியர் ஞானப் பிதற்றல் சொல்லாதே. (வில்)

ஒன்றுள துண்மை-என்றும்
ஒன்றுள துண்மை-அதைக்
கொன்றி டொணாது குறைத்த லொண்ணாது. (வில்)

துன்பமு மில்லை-கொடுந்
துன்பமு மில்லை-அதில்
இன்பமு மில்லை பிறப்பிறப் பில்லை. (வில்)

படைகளுந் தீண்டா-அதைப்
படைகளுந் தீண்டா-அனல்
கடவு மொண்ணாது புனல்நனை யாது. (வில்)

செய்தலுன் கடனே-அறஞ்
செய்தலுன் கடனே-அதில்
எய்துறும் விளைவினில் எண்ணம் வைக்காதே. (வில்)