177
வெகு சீக்கிரத்திலே வானரப் படைகள் இந்த இலங்கை நகரை அடையும். அப் படை நடுவே, கருடாழ்வார்மீது விளங்கும் திருமால் போலே எனது தோள்கள் மீது இராமபிரான் எழுந்தருளியிருக்கக் காண்பாய்.
***
நங்கை - பிராட்டியே! எண் அரும்பெரும் படை - கணக்கிட முடியாத பெரிய வானர சேனை; ஈண்டி - திரண்டு; இ நகர் நண்ணிய பொழுது - இந்த இலங்கை நகரை அடைந்த போது; அது நடுவண் - அந்த வானரப் படை நடுவே; விண் உறுகலுழன் மேல் விளங்கும் - வானத்திலே சஞ்சரிக்கின்ற கருடன் மீது எழுந்தருளி விளங்கும்; விண்டுவின் - மகாவிஷ்ணுவைப் போல; என் நெடு புயத்தில்- என்னுடைய நெடிய தோள்களின் மீது; கண்ணனை - கமலக் கண்ணனாகிய இராமபிரானை; காண்டி - நீ காண்பாய்.
***
அங்கதன் தோள் மிசை
இளவல் அம் மலைப்
பொங்கு இளம் கதிர் எனப்
பொலியப் போர்ப் படை
இங்கு வந்து இறுக்கும் நீ
இடரின் எய்துறும்
சங்கையும் நீங்குதி
தனிமை நீங்குவாய்.
உதயகிரியிலே எழும் இளஞாயிறு போல லட்சுமணன் அங்கதன் தோள்மீது வீற்றிருப்பான். வானரப் படைகள் இந்த இலங்கையிலே வந்து இறங்கும். உனது துன்பம் நீங்கும். இராமன் வருவானோ மாட்டானோ என்ற ஐயமும் நீங்கும். இராமனைப் பிரிந்து இருக்கின்ற உனது தனிமையும் நீங்குவாய்.
கி.—12