நெல்–ஐவனம்–தோரை
ஒரைசா சட்டைவா (Oryza sativa, Linn.)
சங்க இலக்கியங்களில் ‘நெல்’ பொதுவாகவும் ‘ஐவனம்’ என்ற வெண்ணெல்லும், செந்நெல்லும், ‘தோரை’ என்ற மலை வளர் நெல்லும் சிறப்பாகவும் பேசப்படுகின்றன. நெற்பயிர் 4 அடி உயரம் வரையில் வளரும் ஓராண்டுச் செடியாகும். 4-6 மாதங்களில் நெல்லை விளைவிக்கும் புதுப்புது நெல் வகைகள் உருவாக்கப்பட்டுள்ளன. நெல் நமது இந்திய நாட்டில் அதிலும் தண் தமிழ்நாட்டில் தொன்று தொட்டுப் பயிரிடப்பட்டு வரும் உணவுப் பொருள்.
சங்க இலக்கியப் பெயர் | : | நெல்–ஐவனம்–தோரை |
தாவரப் பெயர் | : | ஒரைசா சட்டைவா (Oryza sativa, Linn.) |
நெல்–ஐவனம்–தோரை இலக்கியம்
சங்க இலக்கியங்கள் ‘நெல்’, ‘ஐவனம்’, ‘வெண்ணெல்’, ‘செந்நெல்’, ‘தோரை’ என்ற சொற்களால் நெல்லைக் குறிப்பிடுகின்றன. மேலும், ‘அரி’ என்ற சொல்லும் காணப்படுகிறது.
“நெல் அரியும் இருந்தொழுவர்”
-புறநா. 24 : 1
“கழைவளர் நெல்லின் அரிஉலை ஊழ்த்து”
-மலைபடு. 180
மலைபடுகடாத்து இவ்வடிக்கு, ‘மூங்கிலிலே நின்று முற்றிய நெல்லின் அரிசியை உலையிலிட்டு’ என்று உரை கூறுவர். ஆகவே ‘அரி’ என்ற சொல் நெல்லரிசியைக் குறிப்பிடுகின்றது.
“ஐவன வெண்ணெலொடு அரில் கொள்பு நீடி” -மதுரை. 288