பக்கம்:தமிழரின் மறுமலர்ச்சி, அண்ணாதுரை.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழரின் மறுமலர்ச்சி

31



அந்த முன்னணிப்படை போட்டு வைக்கப் போகும் பாதையிலே பட்டாளங்கள் பலப்பல பிறகு நடக்கும்; மக்கள் மகிழ்ச்சியோடு அந்தப் பாதையிலே நடந்து, புதூர் சென்று வாழ்வார் என்பது திண்ணம்.

தமிழரின் மறுமலர்ச்சியே, 'தமிழில் ஏன் பிறமொழி கலக்க வேண்டும்' என்று கேட்கச் சொல்கிறது.

தமிழரின் மறுமலர்ச்சியே, தமிழகத்திலே 'இந்தி கட்டாயப் பாடமா?' என்று கிளர்ச்சி நடத்தச்சொல்லிற்று.

தமிழரின் மறுமலர்ச்சியே, மார்க்கத் துறையிலே, 'ஆரிய ஆபாசங்கள் கூடாது' என்று தைரியமாக எடுத்துக் கூறச் சொல்லிற்று. 'சமுதாயத் துறையிலே, நீ உயர்ந்தவன் நான் தாழ்ந்தவன்' என்ற பேதம் கூடாது என்று கூறச் சொல்லிற்று.

கண்டனக் குரல்

இத்தகைய ஒவ்வொரு முயற்சிக்கும் ஆரியர்கள் கூடி தமிழரைக் கண்டிக்கின்றனர். தமிழ் இசைக்கு ஆதரவு தரவேண்டுமெனப்படும் முயற்சியைக்கண்டித்து, சின்னாட்களுக்கு முன்னம், சென்னை இரானடே மண்டபத்தில் ஆரியர்கள் பேசினர். அவர்கள் வெளியிட்ட கருத்து -- சங்கீதத்துக்கு நாதம்தான் பிரதானம். ஆகவே, எந்த மொழியில் சாஹித்தியம் இருக்கிறது என்பது பற்றிக் கவலை இல்லை. தெலுங்குக் கிருதிகள் இருப்பவை நல்லவை. தமிழ்ப் பாடல்களைத் தேடிக்கொண்டிருக்கத் தேவையில்லை. தியாகய்யர் போலத் தமிழகத்திலே ஒருவர் தோன்றியதும், தமிழ்ப்பாடல்கள் உண்டாகும் -- என்பதாகும்.

இசையை, மக்கள் கேட்டு இன்புற வேண்டுமானால், அவர்களுக்குத் தெரிந்த மொழியில் சாஹித்தியம் இருந்தால் முடியுமே தவிர சாஹித்தியம் வேறு மொழியிலே இருந்தால் முடியாது. நாதம் காதைக் கவரும்; கருத்துக்கு என்ன அளிப்பது? தமிழனுக்குத் தமிழ்; தெலுங்கனுக்குத் தெலுங்கு;