672
சங்க இலக்கியத்
காந்தளுக்கு இலாங்கலி, கோடை, காந்துகம், பற்றை என்ற பெயர்களும் சூட்டப்படுகின்றன. இவற்றுள் கோடை என்பது கோடலின் மரூஉ மொழி என்றும், காந்துகம் என்பது நிறங் கருதி எழுந்த கற்பனைப் பெயர் என்றும் கருதலாம். காந்தள் கொடியின் அடியில் உள்ள கிழங்கு கலப்பை வடிவினது. இலாங்கலி என்பதற்குக் கலப்பை என்று பெயராதலின், காந்தட் கொடியைக் ‘கலப்பைக் கிழங்குக் கொடி’ எனவும், இலாங்கலி எனவும் கூறுவதுண்டு. பற்றை என்ற சொல், தொல் இலக்கிய வழக்கில் இல்லை. பற்றை என்றால் நேரத்திற்கு நேரம் மனம் மாறும் இரு மனப் பெண்டிர். பற்றைச்சி எனவும், தகாத பிறவிகள் எனவும் கூறப்படும். காந்தள் மலரின் நிறம் அது முதிருங்கால் மாறுவதுண்டு. அதனால், இதனைப் பிற்காலத்தோர் பற்றை எனப் பகர்ந்தனர் போலும்.
சங்க நூல்கள் செங்காந்தளையே பெரிதும் பேசுகின்றன.
“வள்ளிதழ் ஒண்செங் காந்தள்”
-குறிஞ். 62
“காந்தட்குருதி ஒண்பூ”
-நற். 34
“குருதிப் பூவின் குலைக்காந் தட்டே”
-குறுந். 1 : 4
என்பன செங்காந்தளைக் குறிப்பன. ஒண்செங்காந்தள் என்னுமிடத்து ஆசிரியர் நச்சினார்க்கினியர் ‘ஒள்ளிய சிவந்த கோடற்பூ’ என்றாரேனும், கோடல் என்பதைச் செம்மை அடை மொழியுடன் யாண்டும் கூறவில்லை. அதனால், காந்தள் என்பது கோடலைக் குறிக்கும் எனவும், கோடல் என்பது பொதுவாக வெண்கோடலையும், ஒரோவழி வெண்காந்தளையும் குறிக்கும் எனவும் அறியலாம். கோடலைப் பற்றிப் பின்னர்க் காண்போம். செங்காந்தள் மலையிடத்தே பூக்கும் குறிஞ்சி நிலப்பூ என்பதைப் பின்வருவனவற்றால் அறியலாம்.
“ஒண்செங்காந்தள் வாழையஞ் சிலம்பு”
ーநற். 176 : 6
“மலைச்செங் காந்தள் கண்ணி தந்தும்”
-நற். 173 : 2
“. . . . . . . . . . . .ஒண்செங் காந்தள்
கல்மிசைக் கவியும் . . . . . . . .”
-குறுந். 185 : 6-7
“மன்றத் துறுகல் மீமீசைப் பலவுடன்
ஒண்செங் காந்தள் அவிழும் நாடன்”
-குறுந் . 284 : 2–3
“நெடுவரை மிசைய காந்தள்”
-பொருந. 33