ஐயவி
பிராசிக்கா ஆல்பா (Brassica alba, H. f.& T.)
‘ஐயவி’ என்பது சிறிய வெண்கடுகுச் செடி. ஓராண்டுச் செடி. வெண்கடுகுக்காக இது பயிரிடப்படுகிறது.
சங்க இலக்கியப் பெயர் | : | ஐயவி |
தாவரப் பெயர் | : | பிராசிக்கா ஆல்பா (Brassica alba, H. f. & T.) |
ஐயவி இலக்கியம்
சிறுவெண்கடுகு எனப்படும் ஐயவி, ஒரு சிறுசெடி இரண்டடி உயரம் வரையில் ஓங்கி வளரும். இது ஐவன வெண்ணெல் விளைந்த கொல்லையில், அதன் கதிர்களோடு பிணங்கி வளருமென்பர் மாங்குடி மருதனார்.
“............நெடுங்கால் ஐயவி
ஐவன வெண்ணெலொடு அரில் கொள்பு நீடி”
-மதுரைக்.287-288
போரில் புண்பட்ட வீரர்களைப் பேய்க் கணம் தீண்டாதிருக்கும் பொருட்டு ‘ஐயவி’யைப் புகைப்பர் என்றும், ஐயவியைச் சிதறுவர் என்றும் சங்க இலக்கியங்கள் கூறுகின்றன.
“வேம்பு மனை ஒடிப்பவும், காஞ்சிப் பாடவும்
நெய்யுடைக்கையர் ஐயவி புகைக்கவும்”-புறநா. 296:1-3
“ஐயவி சிதறி ஆம்பல் ஊதி
இசைமணி எறிந்து, காஞ்சிபாடி
..........காக்கம் வம்மோ”-புறநா. 281:4-5
ஐயவி ஆரல் மீனின் முட்டை போன்றது என்பர்.
“ஆரல் ஈன்ற ஐயவி முட்டை”-புறநா. 342 : 9
ஐயவி மிகச் சிறியது. அதன் நிறை மிகக் குறைவானது. வான்மீகியார் என்ற புலவர், வையகத்தையும் மனிதன் நோற்கும் தவத்தையும் துலாக்கோவில் நிறை போடுகிறார். தவத்திற்கு முன்னே, ஐயவி நிறைக்குக் கூட வையகம் நிறை போகாது என்று கூறுகின்றார்.