பக்கம்:சங்க கால வள்ளல்கள்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



6. நெடுமான் அஞ்சி


அஞ்சியின் பொது இயல்பு

நெடுமான் அஞ்சியும் கடையெழு வள்ளல்களில் ஒருவன். இவன் அதிகமான் நெடுமான் அஞ்சி, அதிகமான் தகடூர் பொருது வீழ்ந்த எழினி, நெடுமான் அஞ்சி, எழினி எனவும் அழைக்கப்படுபவன். இவன் போரில் பெரு விருப்புடையவன். அவ்விருப்பத்திற்கு இணங்கச் சமர்செய்து சயத்துடன் திரும்பும் அவ்வளவு ஆண்மையாளன். இவன் பெருவீரன். அமராபரணன் என்பது சேரன், சோழன், திதியன், எருமையூரன், இருங்கோவேண்மான், பாண்டியன், பொருநன் என்னும் எழுவருடனும் பகைத்துப் போரிட்டு, அவர்கட்குரிய அடையாளச் சின்னங்களையும் அவர்களுக்குரிய நாடு நகரங்களையும் அரச உரிமையையும் கைப்பற்றினமையி லிருந்து விளங்கும். கோவலூரை வென்று அதனையும் தன் ஆட்சிக்குட்படுத்தியவன். இவன் தன்பால் கொண்டிருந்த வீரர் மழவர் என்னும் பெயரைப் பெற்றிருந்தனர். ஆகவே, இவன் மழவர் தலைவன் என்றும் கூறப்பட்டனன். இவன் ஊர் தகடூர் என்பது. இவன் மலை குதிரை மலையாகும். இவன் சூடியமாலை வெட்சி மலரும், வேங்கைப்பூவும், கூவிளங்கண்ணியும் ஆகும். இவன் சேர மன்னருக்கு உறவினன் என்ற காரணத்தால் அச்சேரரது அடையாள மாலையாகிய பனந்தாரினையும் பாங்குற அணியம் மாண்பு பெற்றவன்.