எதிர்பாராத முத்தம்/பாடல் 6

விக்கிமூலம் இலிருந்து


6

நள்ளிருளில் கிள்ளை வீட்டிற்கு!

நீலம் கரைத்த நிறைகுடத்தின் உட்புறம்போல்
ஞாலம் கறுப்பாக்கும் நள்ளிருளில்—சோலைஉதிர்

பூவென்ன மக்கள் துயில்கிடக்கும் போதில்,இரு
சீவன்கள் மட்டும் திறந்தவிழி—ஆவலினால்

மூடா திருந்தனவாம்! முன்னறையில்
                                 பொன்முடியான்
ஆடா தெழுந்தான் அவள் நினைப்பால்!—ஓடைக்குள்
காலால் வழி தடவும் கஷ்டம்போல், தன்உணர்வால்
ஏலா இருளில் வழிதடவி—மேல் ஏகி,

வீட்டுத் தெருக்கதவை மெல்லத் திறந்திருண்ட
காட்டில்இரு கண்ணில்லான் போதல்போல்....
                                       பேட்டை
அகன்றுபோய், அன்னவளின் வீட்டினது
                                    தோட்டம்
புகும்வாசல் என்று புகுந்தான்—புகும் தருணம்
வீணையிலோர் தந்தி மெதுவாய் அதிர்ந்ததுபோல்,
ஆணழகன் என்றெண்ணி “அத்தான்” என்—றாள்
                                       நங்கை!
ஓங்கார மாய்த்தடவி அன்பின் உயர்பொருளைத்
தாங்கா மகிழ்ச்சியுடன் தான்பிடித்துப்....
                                   பூங்கொடியை
மாரோ டணைத்து, மணற்கிழங்காய்க் கன்னத்தில்
வேரோடு! முத்தம் பறித்தான் ! அந்-நேரத்தில்,

யின்வந்து சேர்த்துப் பிடித்தான் மறைநாய்கள்
பொன் முடியை! மங்கை புலன் துடிக்க——
                                    அன்பில்லா
ஆட்கள் சிலர்வந்தார். புன்னை அடிமரத்தில்
போட்டிருக்கக் கட்டினார் பொன்முடியை!--நீட்டு

மிலாரெடுத்து வீசும் மறைநாய்கன் காலில்
நிலாமுகத்தை ஒற்றி,நிமிர்ந்து, —— கலாபமயில்

“அப்பா அடிக்காதீர்” என்றழுதாள். அவ்வமுதம்
ஒப்பாளைத், தள்ளி உதைக்கலுற்றான்—அப்போது

வந்து நின்ற தாயான வஞ்சிவடி வென்பாள்
சுந்தரியைத் தூக்கிப் புறம்போனாள் ;—சுந்தரியோ

அன்னையின் கைவிலக்கி, ஆணழகிடம் சேர்ந்தே,
“என்னை அடியுங்கள்” என்றுரைத்துச்——
                                     சின்னவிழி
முத்தாரம் பாய்ச்ச, உதட்டின் முனை நடுங்க,
வித்தார லோகம் விலவிலக்க——அத்தானின்
பொன்னுடம்பில் தன்னுடம்பைப் போர்த்த
                                     படியிருந்தாள்.
பின்னும் அவன்கோபம் பெரிதாகி——அன்னார்

இருவரையும் இன்னற் படுத்திப், பிரித்தே
ஒருவனைக் கட்டவிழ்த் தோட்டித்,——திருவனைய

செல்விதனை வீட்டிற் செலுத்தி, மறைநாய்கன்
இல்லத்துட் சென்றான். இவன் செயலை——
                                   வல்லிருளும்

கண்டு சிரித்ததுபோல், காலை அரும்பிற்று!
“வண்டு விழிநீர் வடித்தாளே!——அண்டையில்என்

துன்பந் தடுக்கத் துடித்தாளே!—ஐயகோ,
இன்ப உடலில் அடியேற்றாளே!—அன்புள்ள

காதலிக் கின்னும்என்ன கஷ்டம் விளைப்பாரோ!
மாது புவிவெறுத்து மாய்வாளோ!—தீதெல்லாம்

என்னால் விளைந்ததனால் என்னைப் பழிப்பாளோ!”
என்று, தன் துன்பத்தை எண்ணாமல்—அன்னாள்

நலமொன்றே பொன்முடியான் நாடி நடந்தான்
உலராத காயங்க ளோடு!