தந்தையும் மகளும்/198

விக்கிமூலம் இலிருந்து


198அப்பா! பூக்கள் அழகாகவுமிருக்கின்றன. நல்ல மணமாகவும் இருக்கின்றன, அதற்குக் காரணம்?

ஆம், அம்மா! ஆனால் அவை அழகாயிருப்பதும் நறுமணம் வீசுவதும் நமக்காக அன்று. மரஞ்செடிகளும் அவைகளின் மலர்களும் மனிதன் தோன்றுவதற்கு லட்சக்கனக்கான ஆண்டுகட்கு முன்னரே தோன்றியவை. ஆதலால் அவற்றின் நிறத்துக்கும் மணத்துக்குமுரிய காரணம் வேறாகும். கூறுகிறேன் கேள்.

அம்மா ! பூமியில் காய் உண்டாகிறதே, அது எப்படி உண்டாகிறது? இந்தப் பூவின்

படத்தைப் பார்.அதிலுள்ள மகரந்தப் பையிலுள்ள மகரந்தப் பொடி சூல் முடியில் ஒட்டிக்கொண்டு பிறகு சூல்தண்டு வழியாகக் கீழே இறங்கி சூல்ப்பையிலுள்ள முட்டைகளுடன் சேர்ந்து விதைகள் ஆகின்றன.
 

சாதாரணமாக ஒவ்வொரு மலரிலும் மகரந்தப் பையுள்ள கேசரமும் முட்டைகளுள்ள சூல்த் தண்டுமிருக்கும். காற்று வீசும் பொழுது கேசரத்திள்ள்ள மகரந்தம் சூல்த் தண்டின் முடியில் போய் ஒட்டிக் கொள்ளும். இவ்வாறு ஒரே மலரிலுள்ள மகரந்தம் அதே மலரிலுள்ள சூல் முடியில் போய்ச் சேருமானால் அதைச் சுய மகரந்தச் சேர்க்கை என் று கூறுவார்கள்.

ஆனால் பல செடிகளில் ஒரு மலரிலுள்ள மகரந்தம் அந்த இனத்தைச் சேர்ந்த மற்றொரு மலரிலுள்ள சூல் முடியைப் போய்ச்சேரும். அதைப்பிற மகரந்தரச்சேர்க்கை என்று கூறுவார்கள். இது சாதாரணமாகக் காற்று வீசுவதால்மட்டும் நடை பெறுவதில்லை. இது பெரும்பாலும் தேனீக்கள், வண்ணாத்திப் பூச்சிகள் போன்ற சிறு பூச்சிகளின் உதவியினாலேயே நடைபெறுகிறது.

தேனீ மலரிலுள்ள அமிர்தத்தைப் பருகுவதற்காக மலரினுள் நுழைகிறது. அது அமிர்தம் பருகும்போது கேசரத்திலுள்ள மகரந்தப் பொடி அதன் கால்களில் ஒட்டிக் கொள்கிறது. பிறகு பூச்சி மற்றொரு மலரில் அமிர்தம் குடிக்கும்போது

காலிலுள்ள மகரந்தம் சூல் முடியில் ஒட்டிக் கொள்கிறது. இவ்வாறு மகரந்தச் சேர்க்கை தேனீயின் உதவியால் நடைபெறுகிறது. தேனீயில்லாவிட்டால் மகரந்தச் சேர்க்கையுமில்லை காயும் விதையும் உண்டாவதுமில்லை.

ஆனால் தேனிக்கள் பூக்களிடம் வருவதற்கு உதவியாயிருப்பது எது? பகலில் பூக்களின் அழகான நிறங்களும் இரவில் பூக்களின் வாசனையுமேயாகும். அதனால்தான் பகலில் விரியும் மலர்களுள் பெரும்பாலானவை பல நிறங்களுடையனவாகவும். இரவில் விரியும் மலர்களுள் பெரும்பாலானவை நறுமணமுடையனவாகவும் இருக்கின்றன.

ஆகவே பூக்களிடம் அழகும் மணமும் காண்பது மகரந்தச் சேர்க்கையும் அதன் மூலம் காய் விதை உண்டாவதும் நடைபெறுவதற்காகவே.

"https://ta.wikisource.org/w/index.php?title=தந்தையும்_மகளும்/198&oldid=1538671" இலிருந்து மீள்விக்கப்பட்டது