தந்தையும் மகளும்/45

விக்கிமூலம் இலிருந்து


45அப்பா! தண்ணீரைச் சுடவைக்கும் பொழுது பாத்திரத்தின் அடியிலேயே நெருப்பை இடுகிறார்களே, அதற்குக் காரணம் என்ன?

அம்மா! ஒரு இரும்புக்கம்பியின் ஒரு நுனியைப் பிடித்துக்கொண்டு மறு நுனியை நெருப்பில் வைத்தால் சிறிது நேரத்தில் கையில் பிடித்திருக்கும் நுனியும் சூடாக ஆகிவிடுகிறது. நெருப்பிலுள்ள நுனியிலிருக்கும் இரும்பு அணுக்கள் நெருப்பின் சூட்டை வாங்கி அதை அடுத்துள்ள அணுக்களுக்குத் தருகின்றன. சூடானது இந்த விதமாகக் கடந்து நம்முடைய கைக்கு வந்து எட்டுகிறது.

ஆனால் தண்ணீர் சீக்கிரமாகச் சூடாகக் கூடியதாக இருப்பினும் அதற்குச் சூட்டைக் கடத்தும் சக்தி குறைவேயாகும்: ஒரு நீண்ட தம்ளரில் தண்ணீர் எடுத்துக் கொண்டு அதன் மேற்பாகத்தைச் சூடாக்கிப் பார். மேல் பாகம் சூடாகும். அங்குள்ள நீர் கொதிக்கக்கூடச் செய்யும். ஆனால் அடிபாகத்தில் சூடு ஏறாது. கையால் பிடித்துக் கொண்டிருக்க முடியும். ஐஸ் வைத்திருந்தால் அது உருகாமலேயே இருக்கும். சிறிது நேரம் சென்றபின் தம்ளரில் ஏறும் சூடு கீழ்வரைச் சென்று அடியிலுள்ள தண்ணீரைச் சூடாக்கும்.

தண்ணீருக்குச் சூட்டைக் கடத்தும் சக்தி குறைவு என்பது மட்டுமன்று. தம்ளரை மேலே சுடவைத்தவுடன் அங்குள்ள நீர் சூடாகிறது. சூடானதும் விரிந்து கனம் குறைகிறது. அதனாலும் சூடு கீழுள்ள நீருக்குச் செல்வதில்லை.

ஆனால் பாத்திரத்தின் அடியில் சுடவைத்தால் சூடான தண்ணீர் விரிந்து கனம் குறைந்து மேலே கிளம்பிச் செல்கிறது. மேலேயுள்ள குளிர்ந்த நீர் கீழ் நோக்கி வருகிறது. வ்வாறு பாத்திரத்திலுள்ள தண்ணீர் முழுவதும் சூடாகி விடுகிறது. இதற்காகத்தான் எதையும் நாம் அடுப்பின் மேல் வைத்துச் சூடாக்குகிறோம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=தந்தையும்_மகளும்/45&oldid=1538144" இலிருந்து மீள்விக்கப்பட்டது